இந்திய தயாரிப்பை பயன்படுத்த போகும் வெளிநாட்டு போலீஸ்... எவ்ளோ கார்கள்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகள், இந்தியாவிடம் இருந்து பல்வேறு உதவிகளை பெற்று வருகின்றன. அண்டை நாடுகளுக்கு இந்தியா நேசக்கரம் நீட்டி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மனிதாபிமானம் மற்றும் நட்பு ஆகியவற்றை எல்லாம் கடந்து, அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த உதவிகளுக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சூழலில், தமிழர்கள் அதிகமாக வசிக்க கூடிய நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு, தற்போது இந்தியா உதவி செய்துள்ளது. இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே இலங்கைக்கு பல்வேறு விதங்களிலும் இந்தியா உதவி செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு 500 கார்களை வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. இதில், 125 கார்கள் தற்போது இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது முதல் தொகுதி ஆகும். எஞ்சிய கார்கள் பின்னர் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு தற்போது இந்தியா வழங்கியிருப்பது, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) கார்கள் ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள இந்திய ஹை-கமிஷன் இந்த 125 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களையும் ஒப்படைத்துள்ளது. இந்த கார்களை, இலங்கை காவல் துறையினர் பயன்படுத்தவுள்ளனர். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், புதிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது.
இதுதவிர இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கை ஆப்ஷனையும், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் பெற்றுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஹெச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தி, பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என்ற மாடலையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இது விலை உயர்ந்த மாடல் ஆகும்.
தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 23.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். எனவே மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை வாங்க முடியாதவர்களுக்கு, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் சற்று விலை குறைந்த மாற்று தேர்வாக இருக்கும்.
விலை உயர்ந்த மாடலாக இருந்தாலும் கூட மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே இந்த காருக்கான காத்திருப்பு காலமும் மிகவும் அதிகமாக உள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் வெகு சமீபத்தில், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








