77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது எல்லாம் வேற லெவல் மாற்றம்! எந்த நாட்டையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை!
இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இந்த 77 வருடங்களில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு, இன்று உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது. நிறைய விஷயங்களில் நாம் மற்ற நாடுகளை சார்ந்திருக்காமல் தனித்து இயங்க ஆரம்பித்துவிட்டோம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நாட்டின் போக்குவரத்தில் முதுகெலும்பாக இருக்கும் இரயில்வேயில் பயன்படுத்தும் இரயில்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. அதன்படி வெளிவந்ததே வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்கள் ஆகும்.
வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்கள் மிக வேகமாக இயங்கக்கூடியவை, இதனால் இவற்றில் மிக தொலைவான பயணங்களையும் விரைவாக முடித்துவிடலாம் என்பதெல்லாம் காரணங்களாக இருந்தாலும், இந்த இரயில்களின் பயன்பாட்டை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்வதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதற்கு முக்கிய காரணம், இவை மேட்-இன்-இந்தியா இரயில்கள் ஆகும்.

நமது சென்னை ஐசிஎஃப்-இல் தான் வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெயரில் ஒரே மாதிரியாக இருந்தாலும், வந்தே பாரத் இரயிலுக்கும், அம்ரித் பாரத் இரயிலுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, இரயில் இயங்கும் ஃபார்முலா ஆகும். உலகளவில் இரயில்கள் இரண்டே இரண்டு டெக்னாலஜியில் தான் உருவாக்கப்படுகின்றன. ஒன்று, இரயிலின் 2வது அல்லது 3வது பெட்டியில் மோட்டார் வழங்கப்பட்டிருக்கும்.
இந்த மோட்டார்கள் மின்சாரம் மூலமாக இயங்கி, இரயிலை இயங்க வைக்கும். மற்றொன்று, புஷ்-புல் டெக்னாலஜி ஆகும். அதாவது, இரயிலின் முன் பெட்டியில் ஒன்று, பின் பெட்டியில் ஒன்று என 2 என்ஜின்கள் இருக்கும். இதில் முன்பக்கத்தில் இருப்பது இரயிலை இழுத்துக் கொண்டு செல்லும்போது, பின்னால் இருப்பது தள்ளும். வந்தே பாரத் ஆனது முதலில் சொன்ன ஃபார்முலாவின் படியும், அம்ரித் பாரத் ஆனது 2வது புஷ்-புல் டெக்னாலஜியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, வந்தே பாரத் சற்று விலைமிக்க டிக்கெட் கட்டணத்தை கொண்டுள்ளது; அம்ரித் பாரத் இரயில்களின் டிக்கெட் கட்டணம் குறைவு. இதற்கேற்றப்படி, வந்தே பாரத் இரயில்களில் வழங்கப்படும் ஏசி வசதி அம்ரித் பாரத் இரயில்களில் இல்லை. வந்தே பாரத் இரயில்களுடன் ஒப்பிடுகையில், அம்ரித் பாரத் இரயில்கள் இயங்கும் வேகமும் சற்று குறைவு ஆகும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வழக்கமான இரயில்களை விட இந்த இரயில்கள் அதிவேகமாக இயங்குவதற்கு முக்கிய காரணம், இவற்றின் எடை ஆகும். வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்கள் குறைவான எரிபொருளில் அதிக வேகத்திற்கு இயங்கக்கூடிய வகையில் எடை குறைவானவைகளாக உருவாக்கப்படுகின்றன.

வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் அம்ரித் பாரத் இரயில்கள் நம்மை வெகுவாக வசீகரிக்கின்றன. ஏனெனில், அம்ரித் பாரத் ஆனது நாட்டின் ஏழை, எளியோர்க்கான அதிவேக இரயில்களாக உருவாக்கப்படுகின்றன. தற்போதைக்கு அம்ரித் பாரத் இரயில்கள் மிகவும் குறைவான வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஏனெனில், இந்த ஆண்டு துவக்கத்தில்தான் அயோத்தி இராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நாட்டின் முதல் அம்ரித் பாரத் இரயில் சேவை உத்தர பிரதேசத்தில் துவங்கப்பட்டது.
புஷ்-புல் டெக்னாலஜியில் உருவாக்கப்படுவதால், அம்ரித் பாரத் இரயில்களில் வேகத்தை குறைப்பதும், அதிகரிப்பதும் எளியதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், அம்ரித் பாரத் இரயில்களில் துணை-நிரந்தர கப்லர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இரயில் நகர ஆரம்பிக்கும்போதும், நிறுத்தப்படும் போதும் ஏற்படும் குலுக்கல் ஆனது குறைவாக இருக்கும் என இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கிறார். 1990களில் இருந்து பயன்பாட்டில் இருந்த டெக்னாலஜிக்கு மாற்றாக அம்ரித் பாரத் இரயில்களில் புதிய கப்லர் பயன்படுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருங்காலங்களில் பழைய இரயில்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முழுவதுமாக வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்கள் கொண்டுவரப்பட உள்ளன என்பது உறுதி. இதற்கான வேலைகளில் மத்திய அரசு ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த வகையில், சுதந்திர இந்தியாவின் இரயிவே போக்குவரத்தில் தற்சமயம் மிக பெரிய மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைவுக்கூர்வோம்...


Click it and Unblock the Notifications









