ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும்போது எத்தனை பேர் கிண்டல் பண்ணாங்க! உலகமே இந்தியாவை பார்த்து ஆச்சிரியப்படுது
உலகின் எங்கோ ஓர் மூலையில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் இந்தியா வரை எதிரொலிக்கிறது எனும்போது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் சில நகரங்களில் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதற்கு கூட இந்த போர் பதற்றமான சூழல்தான் காரணமாக கூறப்படுகிறது.
ஆனால், இது நடந்துவிடுமோ என நாம் அனைவரும் பயந்த எரிபொருள் விலை உயர்வு இந்த போர் பதற்றத்தினால் ஏற்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் (Crude Oil) வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துவரும் சூழலில், போரினால் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் தாக்குதல்கள் எண்ணெய் விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துமோ என அஞ்சப்பட்டது.

ஏனெனில், ஈரானுக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz)-இல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் வழித்தடமாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால், போர் பதற்ற சூழலினால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கொண்டு செல்ல பல முன்னணி ஆயில் நிறுவனங்கள் கூட தயக்கம் காட்டுகின்றன.
உலகின் மிக பெரும் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நிறுவனமாக சவுதி அரம்கோ (Saudi Aramco)-இன் சிஇஓ இதே போர் நிலை தொடர்ந்தால், ஆயில் மார்க்கெட் மிக பெரிய பேரழிவு விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளார். இருப்பினும், இந்தியாவை பொறுத்தவரையில் பெரியதாக எந்த பாதிப்பும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிலான மோதல் ஏற்படாதவரை பெட்ரோல், டீசல் சில்லறை விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என இந்திய அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், உலகின் பிற பகுதிகளில் இருந்து விநியோகத்தை அதிகரித்து இந்த இருப்பு நிரப்பப்படும் என்றும் கடந்த வாரம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது இல்லாமல், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயும் இருப்பு உள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு எதிர்பாராத விதமாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு தோராயமாக 9% சரிந்து 88.60 டாலர் ஆகவும், ப்ரென்ட் கச்சா எண்ணெய் சுமார் 8.5% குறைந்து 92.50 டாலர் ஆகவும் உள்ளது.
முன்னதாக ஒரு பேரல் 100 டாலரை தாண்டிய நிலையில், இந்த விலை வீழ்ச்சி பெரும் நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும், திரவ பெட்ரோலிய எரிவாயுவின் (LPG) விநியோக நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அரசு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு காலத்தை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு எல்பிஜி சிலிண்டர் புக் செய்த பின் அடுத்த சிலிண்டரை புக் செய்ய குறைந்தது 25 நாட்கள் ஆவது காத்திருக்க வேண்டும்.
பெரிய நகரங்களில் எல்பிஜி பற்றாக்குறை வணிகங்களை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள ஹோட்டல் சங்கங்கள், எல்பிஜி விநியோக தடை தொடர்ந்தால் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவெடுத்த சமயத்தில் அது உலகளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது நடக்கும் சூழ்நிலைகளை எல்லாம் பார்த்தால், இந்திய அரசு எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை ஆக செயல்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்ற சூழல் இன்னும் பல மாதங்களுக்கு நீடித்தால், அது நிச்சயமாக இந்திய ஆயில் மார்க்கெட்டையும், ஆட்டோமொபைல் (Automobile) துறையையும் பாதிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








