போர் விமானம், ராணுவ ஹெலிகாப்டர், ஏவுகணைகளை ஏற்றுமதி செய்யப்போகும் இந்தியா!
காலம் மாறுது, காட்சிகளும் மாறுது என்ற வசனத்திற்கு ஏற்ப உலக அரங்கில் இந்தியா மீதான பார்வை சட்டென மாறி வருகிறது. விண்வெளி துறையில் உலக வல்லரசுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்தியா தற்போது ராணுவ ஆயுத விற்பனை மார்க்கெட்டிலும் புதிய அத்தியாயங்களை எழுத இருக்கிறது.
ஆம், இதுவரை போர் விமானங்கள், ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, இனி அவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மாபெரும் முன்னேற்றத்தை காண இருக்கிறது. தேஜஸ் போர் விமானம், எல்சிஎச் ஹெலிகாப்டர் மற்றும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கு திட்டம் இருப்பதாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு[DRDO] தெரிவித்துள்ளது.

அமைச்சர் தகவல்
"தற்போது ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர்களாக உள்ள இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி வர்த்தகம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஏவுகணைகள், ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்களை வாங்குவதற்கு ஆப்ரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டாப் 5
இந்தியாவின் ராணுவ ஆயுத ஏற்றுமதியை தடாலடியாக உயர்த்துவதற்கு 5 சாதனங்கள் கையிலெடுக்கப்பட்டிருக்கின்றன. அவை எவை என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் தொடர்ந்து காணலாம்.
Photo Credit: DRDO

01. எல்சிஎச் ஹெலிகாப்டர்
இந்தியாவிலேயே சொந்தமாக உருவாக்கப்பட்ட எல்சிஎச் எனறு குறிப்பிடப்படும் இலகு ரக போர் ஹெலிகாப்டரை வாங்குவதற்கு குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடுகள் விருப்பம் தெரிவித்து உள்ளனவாம். மிக குறுகலான உடல்கூடு அமைப்பு கொண்ட இந்த ஹெலிகாப்டர் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதே இதற்கு காரணம்.

சிறப்பம்சங்கள்
5.5 டன் எடை கொண்ட ஹெலிகாப்டர் ரகத்தை சேர்ந்த போர் ஹெலிகாப்டர் மாடல் இது. அதி உயரமான மலை பிரதேசங்களில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தில்தான் இந்த ஹெலிகாப்டரும் தயாரிக்கப்பட்டது. வான் தாக்குதல் மற்றும் தரை தாக்குதல்களில் துல்லியமாக ஏவுகணைகளை ஏவி பரிசோதனைகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதர விசேஷங்கள்
தரையிறங்கும்போது அல்லது அவசர சமயத்தில் வேகமாக மோதினாலும், சேதமடையாத சக்கரங்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு, தீப்பிடிக்காத விசேஷ பெட்ரோல் டேங்க்குகள், அணுசக்தி தாக்குதலிலும் பாதிப்பு ஏற்படுத்தாத காக்பிட் என பல்வேறு நவீன கால சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. மணிக்கு 280 கிமீ வேகத்தில் 700 கிமீ தூரம் வரை பறக்கும்.

வான்பகுதி கண்காணிப்பு சாதனம்
AEW&C என்று குறிப்பிடப்படும் இந்த சாதனம் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விஷயங்களை கவனிக்கும். வான் பாதுகாப்பிற்கு முக்கிய பங்காற்றும். வான் பகுதிகளில் எதிரி நாட்டு விமானங்களின் நடமாட்டம், உளவு பார்த்தல், எதிரிகளின் முன்னேற்றம் குறித்து எச்சரித்து, அதற்கு உரிய முன் எச்சரிக்கை விஷயங்களை செய்யும் கண்காணிப்பு சாதனம். இந்த சாதனம் எம்ப்ரேயர் 145 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு நாட்டு ஏர் ஷோக்கள் மூலமாக இதன் வர்த்தகத்தை பெருக்குவதற்கு டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது.
Photo Credit: DRDO

03. ஆகாஷ் ஏவுகணை
ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை மனோகர் பாரிக்கர் சமீபத்தில் தெரிவித்தார். இந்த ஏவுகணை 25 கிமீ தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. டிஆர்டிஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஏவுகணையும் எதிர்காலத்தில் இந்திய ராணுவ ஆயுத ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: DRDO

பிரம்மோஸ் ஏவுகணை
ரஷ்யாவின் கூட்டணியில் இந்தியாவின் டிஆர்டிஓ உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையையும் ஏற்றுமதி செய்யும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது. உலகிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணையாக குறிப்பிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்
பிரம்மோஸ் ஏவுகணை 290 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும். 2.8 மேக் என்ற ஒலியைவிட இருமடங்கு வேகத்தில் பயணிக்கும். குறைந்தபட்சமாக 10 மீட்டர் உயரத்திலும், அதிகபட்சமாக 15 கிமீ உயரத்திலும் பறந்து செல்லும். செங்குத்தாகவும், சாய்வாகவும் வைத்து ஏவ முடியும்.

பிரம்மோஸ் ஏற்றுமதி
போர் விமானம், நீர்மூழ்கி கப்பல், லாஞ்சர் வாகனத்தின் மூலமாக இதனை நீர், நிலம், ஆகாயம் என மூன்று மார்க்கங்களிலும் ஏவ முடியும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த ஏவுகணையை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றன.

தேஜஸ் போர் விமானம்
இதுவரை வெளிநாடுகளிலிருந்து போர் விமானங்களை வாங்கி வந்த இந்தியா தற்போது சொந்தமாக உருவாக்கிய தேஜஸ் போர் விமானத்தை வைத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஆயத்தமாகிவிட்டது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் எடுத்தகொண்டு உருவாக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் நான்காம் தலைமுறைக்கும் மேலான சிறப்பம்சங்களை கொண்டது.

சிறப்பம்சங்கள்
பன்முக திறன் கொண்ட ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்ட இலகு வகை போர் விமானம் தேஜஸ். டிஜிட்டல் ஃப்ளை பை ஒயட் கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டதால், இந்த விமானத்தை பைலட் வெகு எளிதாக இயக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். விமானப்படை இதனை இயக்கிப் பார்த்து தெரிவித்த சில குறைபாடுகளை களைந்து இந்த ஆண்டு இறுதியில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மாடல் வெளியிடப்பட உள்ளது.

ஏன் ஆர்வம்?
இந்த விமானத்தை வாங்குவதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே 120 தேஜஸ் விமானங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் கொடுத்திருக்கும் நிலையில், வெளிநாடுகளும் இந்த விமானத்தை ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம், மிக குறைந்த விலைதான். ஆம், உலகிலேயே இதற்கு இணையான சிறப்பம்சங்கள் கொண்ட விமானங்களைவிட பன்மடங்கு குறைவான விலையில் இது தயாரிக்கப்படுகிறது.

விமானப்படை தளபதி
இந்த போர் விமானத்தில் குறைபாடுகள் இருப்பதாக கூறி இந்திய விமானப்படை ஆரம்பத்தில் ஒதுக்க முயன்றது. இந்தநிலையில், இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சிக்கான தேஜஸ் போர் விமானத்தில் இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா பறந்து நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தேஜஸ் போர் விமானம் மிகச்சிறப்பாக இருப்பதாகவும், இதனை உருவாக்கிய அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பணியாளர்கள் உற்சாகம்
இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா அனுபமிக்க போர் விமானி. இதுவரை 3,400 மணி நேரம் போர் விமானத்தை இயக்கிய பழுத்த அனுபவம் கொண்டவர். அவர் மனதார பாராட்டி இருப்பது எச்ஏஎல் நிறுவன பணியாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தனியார் பங்களிப்பு
தேஜஸ் போர் விமானத்திற்கு ஏற்கனவே ஆர்டர்கள் குவிந்து வரும் நிலையில், வெளிநாடுகளும் வாங்க ஆர்வம் காட்டுவதால், எதிர்கால தேவையை சமாளிக்கும் யுக்திகளை கையாள மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்படி, டாடா, ரிலையன்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தேஜஸ் விமானத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

பெரும் வர்த்தகம்
பல மில்லியன் டாலர்கள் கொண்ட இந்த ராணுவ ஆயுத வர்த்தக மார்க்கெட்டில் மிகப்பெரிய பங்களிப்பை நோக்கி இந்தியா முன்னேற இருக்கிறது.
காலமும் மாறுது... காட்சிகளும் மாறுது!


Click it and Unblock the Notifications








