அமெரிக்காவிடம் மோடி சரண்டர்.. ஈரான் கச்சா எண்ணெய்க்கு இந்தியா குட் பை.. பெட்ரோல், டீசல் விலை உயரும்
அமெரிக்கா கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து, ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள, மோடி அரசு முடிவு செய்து விட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து, ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள, மோடி அரசு முடிவு செய்து விட்டது. இதன் பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தற்போது உள்ளதை காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஈரான் நாட்டு அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா விலகியது. இதனால் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, பல்வேறு வழிகளில் ஈரான் நாட்டுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக ஈரான் உடனான வர்த்தக உறவுகளை துண்டித்து கொள்ளும்படி பல்வேறு நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த உத்தரவையும் மீறி ஈரான் உடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வரும் நவம்பர் 4ம் தேதியுடன் இந்தியா நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தற்போதில் இருந்தே படிப்படியாக குறைத்து கொண்டே வர வேண்டும் என்றும், நவம்பர் 4ம் முதல் கச்சா எண்ணெய் இறக்குமதி ஜீரோ என்ற நிலையில் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த உத்தரவு இந்தியாவுக்கு மட்டுமல்ல. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருந்தும். ஏனெனில் ஈரான் அரசு தனது கச்சா எண்ணெய் வளத்தை வைத்துதான் பட்ஜெட்டே போட்டு கொண்டிருக்கிறது. இதன்மூலம் கிடைக்கும் பணத்தில்தான் அந்நாட்டு அரசே இயங்கி கொண்டுள்ளது.

ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது. எனவே கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் திட்டம்.

அமெரிக்காவின் இந்த உத்தரவால், இந்திய அரசு கடும் நெருக்கடியில் சிக்கி கொண்டுள்ளது. ஏனெனில் ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஈரானிடம் இருந்துதான் இந்தியா மிக அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை வாங்கி கொண்டிருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மட்டும் 18.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ஈரான் நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது. கச்சா எண்ணெய்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மூலப்பொருள்.

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் திண்டாடி கொண்டுள்ளனர். இந்த சூழலில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால் அல்லது குறைந்தால், பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விடும்.

எனவே இந்தியாவின் அனைத்து கண்களும் தற்போது புது டெல்லியை நோக்கியே உள்ளன. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, இந்த விஷயத்தில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது? என்பதை அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

ஆனால் அமெரிக்காவின் உத்தரவுக்கு புது டெல்லி பணிந்து விடும் என்று வெளியாகி வரும் தகவல்களால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அமெரிக்கா விதித்த கெடு நவம்பர் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன.

எனினும் அமெரிக்காவின் உத்தரவை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான முதல் அறிகுறி தற்போதே தென்பட்டு விட்டது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக இருப்பவர் நிக்கி ஹாலே. தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் புது டெல்லியில் இருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, அமெரிக்காவின் நண்பனான இந்தியா, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அவர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் கச்சா எண்ணெய்யை சார்ந்து இருக்காதீர்கள் என்றும் அவர் மோடியிடம் கேட்டு கொண்டுள்ளார். இந்த சூழலில், இந்திய அரசின் எரிபொருள் துறை அமைச்சகமானது, நம் நாட்டில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டத்தை உடனடியாக நடத்தியது.

இந்த கூட்டத்தில் அமெரிக்காவின் உத்தரவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட சில உத்தரவுகள், சாமானிய மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன.

அதாவது ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மிக மிக கடுமையான அளவில் குறைந்து விடும். அல்லது அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது அறவே நிறுத்தப்பட்டு விடும். எனவே அதற்கு தயாராகும்படி சுத்திகரிப்பு நிறுவனங்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளை களைவதற்கான மாற்று வழிகளை கண்டறியும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவது உறுதியாகியுள்ளது.

இதனால் தற்போது இருப்பதை காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் முடிவு சாமானிய மக்களைதான் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசலுக்கு என பெருந்தொகையை மிடில் கிளாஸ் குடும்பங்கள் ஒதுக்க நேரிடும்.

இதற்கு முந்தைய காலங்களிலும் கூட இந்தியாவுக்கு இப்படியான நெருக்கடிகள் ஏற்படவே செய்துள்ளன. இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த சமயங்களில் எல்லாம் ஈரானிடம் இருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த சொற்ப எண்ணிக்கையிலான நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஆனால் தற்போதைய சூழல் முற்றிலும் வேறுவிதமாக உள்ளது. அமெரிக்கா உடனான பொருளாதார உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காகவே, ஈரானை கைவிட்டு விடும் முடிவை இந்தியா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் கூட இதற்கு ஒரு காரணமாக தெரிகிறது.

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இந்தியாவின் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென உயர்த்தியது.

இதனால் அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக போர் மூண்டது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ இரு நாட்டின் வியாபாரிகளும்தான். இதனால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னையை களைய இந்தியா முயல்கிறது.

இந்த சூழலில், சர்வதேச சந்தையில் சமீப காலமாக கச்சா எண்ணெய்யின் விலையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா உடனான வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

எனவே தற்போதைய சூழலில் அமெரிக்காவை பகைத்து கொள்ள இந்தியா விரும்பவில்லை. இதனால் ஈரான் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழியை கண்டறிந்தே ஆக வேண்டிய மிக மிக நெருக்கடியான சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு விட்டது.

கச்சா எண்ணெய் விஷயத்தில், இந்தியாவுக்கு சமீபத்தில் பல்வேறு சலுகைகளை ஈரான் வழங்கியிருந்தது. அதாவது கச்சா எண்ணெய்யை கொண்டு வருவதற்கான ஷிப்பிங் செலவுகளை இந்தியா கொடுக்க வேண்டியதில்லை. அதனை ஈரான், இந்தியாவுக்கு இலவசமாக செய்து கொடுத்து கொண்டிருந்தது.

கச்சா எண்ணெய் வாங்கியதற்கான பணத்தையும் கூட உடனடியாக இந்தியா கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. கச்சா எண்ணெய்க்கான பணத்தை கொடுப்பதற்கான கிரெடிட் பீரீயட்டை இந்தியாவுக்காக 60 நாட்கள் வரை ஈரான் நீட்டிப்பு செய்திருந்தது.

இந்த சலுகைகளை எல்லாம் இந்தியா இழந்து விடும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் கச்சா எண்ணெய்க்கு மாற்றாக சவுதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா இனி அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சூழலில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC-Organization of the Petroleum Exporting Countries) வரும் ஜூலை மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது தற்போது உள்ள அளவுடன் சேர்த்து, ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஓபெக் கூட்டமைப்பு அதிகமாக உற்பத்தி செய்யவுள்ளது. ஆனால் ஈரான் கச்சா எண்ணெய்யை ஈடுகட்டும் அளவிற்கு இது போதுமானதாக இருக்குமா? என்றால் நிச்சயமாக சந்தேகமே.

இந்த நேரத்தில் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி வருவதால், பாஜக கட்சி கவலையடைந்துள்ளது. இந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தால், தேர்தல் முடிவுகளில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே ஈரான் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழியை கண்டறியும் முயற்சிகளில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. எனினும் 60 நாள் கிரெடிட் பிரீயட் உடன் கச்சா எண்ணெய் வழங்கும் நிறுவனங்களும், வர்த்தகர்களும் சந்தையில் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்தும் கூட கச்சா எண்ணெய்யை வாங்கி கொள்ளலாம் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








