இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு மிக கடுமையாக சரிந்தது... ஏன் தெரியுமா?
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் அதிக வாகனங்கள் இயங்கி கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் பெரும்பாலான வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது உள்ளது. ஒரு சில வீடுகளிலோ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக வாகனங்கள் இருக்கின்றன. எனவே இந்தியாவின் எரிபொருள் பயன்பாடும் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

ஆனால் கச்சா எண்ணெய் வளம் இல்லாத காரணத்தால், எரிபொருள் தேவைக்கு இறக்குமதியைதான் நாம் பெரிதும் நம்பியுள்ளோம். இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உலகில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை மிகவும் அதிகம். இது பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தாக வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

அத்துடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இது குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வெகுவாக சரிந்துள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கடந்த ஜூலை மாதம் வெறும் 12.34 மில்லியன் டன் அளவிற்கான கச்சா எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 36.4 சதவீத சரிவாகும். 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பார்த்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி மிக குறைவான நிலைக்கு சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்குதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே அன்றைய தினத்தில் இருந்து டாக்ஸி, ஆட்டோ மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் கார், இரு சக்கர வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயங்குகின்றன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்களும் வாகனங்களை இயக்குவதை குறைத்து கொண்டுள்ளனர். இதனால் இந்தியாவின் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. ஆனால் வாகன போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும்போது, எரிபொருள் தேவை மீண்டும் உயரலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








