இந்த கப்பல் இயங்க வானம் திறந்திருந்தா போதும்.. பெட்ரோல், டீசல்னு எதுவுமே போட வேண்டாம்..
ஓர் வாகனம் இயங்க வேண்டும் என்றால் பெட்ரோல் அல்லது டீசல் கட்டாயம் தேவைப்படும். இது இல்லாமல் வாகனம் இயங்குவது என்பது அரிதானது. ஆனால், பெட்ரோல், டீசல் இல்லாமல் இயங்கும் வாகனங்களும் இந்த உலகில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தண்ணீரில் ஓடும் வாகனம், சூரிய ஒளியில் இயங்கும் வாகனம் என அரிய வகை வாகனங்களை உருவாக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே பெட்ரோல், டீசல்னு எதுவும் தேவைப்படாத படகு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படகு இயங்க வானம் திறந்த நிலையில் இருந்தால் மட்டுமே போதும். அதேவேளையில், சூரிய ஒளி மிகவும் முக்கியமானது. ஆமாங்க இந்த படகு சூரிய ஒளியில் இயங்கக் கூடியது ஆகும்.

இதனையே கேரள அரசு மாநிலத்தில் வெளியீடு செய்திருக்கின்றது. இது சூரிய ஒளியில் இயங்கும் படகு மட்டுமல்ல, அதிக வேகத்தில் இயங்கும் படகும்கூட. அத்துடன், லக்சூரி வசதிகளும் இந்த படகில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இதுவே இந்தியாவின் முதல் சூரிய ஒளியில் இயங்கும் அதிக வேக படகும் ஆகும்.
இ-பரகுடா (Barracuda) என இந்த படகிற்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இதனை கொச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் நேவால்ட் மற்றும் மஸகான் டாக் ஷிப் கட்டுமான நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்தே தயார் செய்திருக்கின்றன. பரகுடா என்பது நீளமான மீனின் பெயர் ஆகும்.

இந்த படகில் சுமார் 12 பேர் வரை பயணிக்க முடியும். மேலும், சரக்குகளையும் ஏற்றிச் செல்ல முடியும். இதன் நீளம் 14 மீட்டர் ஆகும். மேலும், இதன் அகலம் 4.4 மீட்டர் ஆகும். இந்த படகால் மணிக்கு 12.5 க்நாட்டுகள் வேகத்தில் பயணிக்க முடியும்.
அதாவது, இதன் வேக திறன் மணிக்கு 23 கிமீ ஆகும். இந்த சூப்பரான வேக திறனுக்காக படகில் 50 கிலோவாட் திறன் கொண்ட மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், கப்பல் பயன்பாட்டிற்கான எல்எஃப்பி (LFP) வகை பேட்டரி பேக் இந்த படகில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக 6 kW சோலார் பரகுடாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த சோலார் பேனல்கள் அனைத்தும் படகின் மேற்கூரை மீதே பொருத்தப்பட்டு இருக்கின்றன. எளிதில் சூரிய ஒளியைப் பெறும் நோக்கிலேயே படகின் மேற்கூரையில் அது பொருத்தப்பட்டு இருக்கின்றன.
வழக்கமான படகுகளைப் போன்றில்லாமல், இந்த பரகுடா படகு சத்தமே இல்லாமல் பயணிக்கும். மேலும், இதில் பெரிய அளவில் அதிர்வுகளும் இருக்காது. டீசல் மோட்டார் இல்லாத காரணத்தினால் இது பரகுடாவில் சாத்தியமாகி இருக்கின்றது. ஆகையால், லக்சூரியான ரைடு அனுபவம் இந்த படகில் கிடைக்கும் என்பது துள்ளியமாக தெரிகின்றது.
இந்த படகு கார்பன் உமிழ்வை குறைக்கும் பொருட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த படகு ஆறுகளில் மட்டுமல்ல கடலிலும் பயணிக்கும் என கூறப்படுகின்றது. இதனால், கடுமையான அலைகளையும் சமாளிக்க முடியுமாம். அலையை மட்டுமல்ல கடலில் வீசும் கடுமையான காற்றையும் சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த படகு ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூரிய ஒளியில் இயங்கும் என்பதால் இந்த படகை பராமரிக்க பெரிய அளவில் செலவாகாது என தெரிகின்றது. அதேவேளையில், இதில் உள்ள பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 7 ஏழு மணி நேரம் தேவைப்படும். மேலும், சூரியன் தெளிவாக படகின் மேற்கூரையில் உள்ள சோலார் பேனல்களில் விழுந்தாலே அது விரைந்து சார்ஜாகும். இத்தகைய படகை கேரள அரசு வெளியீடு செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









