இந்தியாவில் இப்படி ஒரு நெடுஞ்சாலை வரும்னு யாரும் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டாங்க... இதெல்லாம் வேற லெவல்!
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலை பற்றிய தகவல்களை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலை (Electric Highway), டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு இடையே விரைவில் அமையவுள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி தற்போது இந்த மகிழ்ச்சியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே எலெக்ட்ரிக் நெடுஞ்சாலையை அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனத்துடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு இடையே மட்டுமல்லாது, டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையேயும் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்வீடனை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுள்ளனர்.

இந்தியாவின் நெடுஞ்சாலைகள் துறையில் வெளிநாட்டு முதலீட்டை அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி வருகிறார். முன்னதாக இந்தியாவில் எலெக்ட்ரிக் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ஐரோப்பிய யூனியனையும் கூட அமைச்சர் நிதின் கட்காரி அழைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு எலெக்ட்ரிக் நெடுஞ்சாலையை அமைக்க வேண்டும் என்பது எனது கனவு. இது தற்போது முன்மொழியப்பட்ட திட்டமாக உள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அத்துடன் பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் நிதின் கட்காரி மிக நீண்ட காலமாக மாற்று எரிபொருட்களின் அவசியத்தை எடுத்துரைத்து கொண்டுள்ளார்.

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக சிஎன்ஜி மற்றும் எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்க வேண்டும் என அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும் என்பது அவரது கருத்து.

எனவே இந்தியாவில் தற்போது பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. பிரேசில் போன்ற ஒரு சில நாடுகளில் ஏற்கனவே எத்தனால் எரிபொருளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து விட்ட நிலையில், இந்தியா தற்போது இந்த விஷயத்தில் ஆரம்ப நிலையில் உள்ளது.

எனினும் ஒன்றிய அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளால் கூடிய விரைவில் இந்தியாவில் எத்தனால் எரிபொருளின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி மற்றும் எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்தால், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பது கூடுதல் நன்மை.

இந்தியாவில் தற்போது சிஎன்ஜி வாகனங்களும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் உடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி எரிபொருளின் விலை மிகவும் குறைவாக இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். இதன் மூலம் சிஎன்ஜி வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு வெகுவாக குறையும்.

இதே காரணத்திற்காக தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்புவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








