வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்!
விண்வெளிக்கு செயற்கைகோள்களை எடுத்துச் சென்று இறக்கிய பின்பு பூமிக்கு திரும்பும் மறுபயன்பாட்டு ராக்கெட் இஸ்ரோ இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த மறுபயன்பாட்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் 20 நிமிடங்ககள் விண்ணில் பறந்து மீண்டும் வங்காள விரிகுடா கடலில் இறங்கியது. இதன்மூலமாக, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்டியிருக்கிறது. இந்த திட்டம் குறித்த 10 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாதிரி ராக்கெட்
இன்று விண்வெளியில் ஏவப்பட்ட மறுபயன்பாட்டு ராக்கெட் 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்ட ஸ்கேல் மாடல் எனப்படும் மாதிரி மாடல். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தயாரிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக 600க்கும் மேற்பட்ட இஸ்ரோ மையத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இந்த ராக்கெட்டை உருவாக்கியிருக்கின்றனர்.

செலவு குறையும்
மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்துவதன் மூலமாக, விண்வெளிக்கு செயற்கைகோள்களை கொண்டு செல்லும் செலவு 10 மடங்கு வரை குறையும். அதாவது, தற்போது ஒரு கிலோவுக்கு 20,000 டாலர் என்று இருக்கும் செலவு, இந்த மறுபயன்பாட்டு ராக்கெட் மூலமாக 2,000 டாலர் என்ற அளவுக்கு குறையும்.

தொடர் சோதனைகள்
இன்று ஏவப்பட்டிருக்கும் மாதிரி மாடலைத் தொடர்ந்து, மேலும் இரண்டு புரோட்டோடைப் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனைகள் செய்வதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. புரோட்டோடைப் மாடல்களைவிட இறுதி வடிவம் பெறும் மறுபயன்பாட்டு ராக்கெட் 6 மடங்கு பெரிதாக இருக்கும். அதாவது, 40 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த ராக்கெட்டை 2030ம் ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
9 டன் எடையுடைய ராக்கெட் எஞ்சினுடன் தற்போது மறுபயன்பாட்டு ராக்கெட் செலுத்தப்பட்டது. இறக்கை பொருத்தப்பட்ட விண்வெளி ஓடம் போன்ற இந்த ராக்கெட்டை அந்த எஞ்சின் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது. அதன்பிறகு, அந்த ராக்கெட் சுய கட்டுப்பாட்டில் வங்காள விரிகுடா கடலில் வந்து இறங்கியது. இதனை மேலும், பல விதத்தில் மேம்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

முதல்முறை
முதல்முறையாக இறக்கை பொருத்தப்பட்ட ராக்கெட்டை இஸ்ரோ செலுத்தி சாதனை படைத்திருக்கிறது. தற்போது கடலில் இறக்கப்பட்ட இந்த ராக்கெட்டை நிலத்திலும் தரை இறக்குவதற்கான முயற்சிகள் செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள்
2030ம் ஆண்டு ஏவப்பட இருக்கும் 40 மீட்டர் மறுபயன்பாட்டு ராக்கெட்டில் இந்திய விண்வெளி வீரர்களும் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்போதைய சோதனை மூலமாக புரோட்டோடைப் மாடல்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பல விஷயங்கள், ஆய்வுகளை இஸ்ரோ செய்ய இருக்கிறது.

போட்டி
2011ம் ஆண்டு மறுபயன்பாட்டு ராக்கெட் திட்டத்தை அமெரிக்கா கைவிட்ட நிலையில், இஸ்ரோவின் இந்த திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் புளூ ஆரிஜின் ஆகிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே தற்போது விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்டுகளை தயாரித்து வருகின்றன. இந்த வரிசையில், இந்தியாவின் இஸ்ரோவும் தற்போது போட்டி கொடுக்க களமிறங்கியிருக்கிறது.

ஆவல்
மிக குறைவான செலவில் செயற்கைகோள்களை இஸ்ரோ அமைப்பு விண்ணில் செலுத்தி வருவதால், பல உலக நாடுகள் இஸ்ரோ ராக்கெட்டில் வைத்து செயற்கைகோள்களை ஏவி வருகின்றன. அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களைவிட இஸ்ரோவின் மறுபயன்பாட்டு ராக்கெட் பல விதங்களிலும் சிறப்பாகவும், குறைவான செலவீனம் கொண்டதாக இருக்கும் என்பதால், நம் நாடு மட்டுமின்றி, பல உலக நாடுகள் ஆவலுடன் இந்த ராக்கெட்டை எதிர்நோக்கி இருக்கின்றன.

பிரதமர் வாழ்த்து
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வியை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!


Click it and Unblock the Notifications








