இந்தியாவிலேயே முதல்முறையாக கொச்சி துறைமுகத்தில் அதிநவீன கண்காணிப்பு வசதி!!
நாட்டிலேயே முதல்முறையாக கொச்சி துறைமுகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதாக கண்டறிவதற்கான ஒருங்கிணைந்த கண்காணிப்பு வசதி நிறுவப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், கொச்சி துறைமுக பாதுகாப்பு வெகுவாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கொச்சியை தொடர்ந்து மும்பை, விசாகப்பட்டணம் மற்றும் போர்ட் ப்ளேர் ஆகிய துறைமுகங்களில் இந்த அதிநவீன பாதுகாப்பு வசதி செய்யப்பட உள்ளது. இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு வசதி கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நவீன சென்சார்கள்
கடலுக்கடியிலும், மேற்பகுதியிலும் எதிரிகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்கும், அதிநவீன கண்காணிப்பு சென்சார்கள் கொச்சி துறைமுகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதுதவிர, கேமராக்கள் மற்றும் மீயொலி மூலமாக எதிரிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு
கடலுக்கு மேல்புறத்திலும், தண்ணீருக்கு அடியிலும் எதிரிகள் நடமாட்டத்தை கண்காணித்து, தானியங்கி முறையில் எச்சரிக்கும் விதத்தில் இந்த சென்சார் சிஸ்டம் செயல்படும். இது ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தப்படும்.

இஸ்ரேல் தயாரிப்பு
இந்த அதிநவீன கண்காணிப்பு வசதிக்கான சாதனங்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த எல்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

கட்டுப்பாடு
கேரள கடற்படை பொறுப்பு அதிகாரி இந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு சாதனத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சொற்ப எண்ணிக்கை
உலக அளவில் மொத்தமே 150 துறைமுகங்களில் மட்டுமே இந்த அதிநவீன கண்காணிப்பு சாதனம் நிறுவப்பட்டிருக்கிறது.

செயல்படும் விதம்
அதிநவீன ரேடார், கடலுக்கடியில் நிறுவப்பட்டிருக்கும் சென்சார்கள் மற்றும் சோனார் எனப்படும் மீயோலி சமிக்ஞைகள் போன்றவற்றை கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் கம்ப்யூட்டர் மூலம் பெறப்பட்டு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு தகவல்களை ஒரே இடத்தில் பெற முடியும். இதன்மூலம், கொச்சி துறைமுக பகுதியின் பாதுகாப்பு வெகுவாக மேம்படுத்தப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








