இதெல்லாம் வேற லெவல்... அமெரிக்காவிற்கு இணையாக மாறப்போகும் இந்தியா... கெத்து காட்டும் ஒன்றிய அரசு!
அமெரிக்காவிற்கு இணையாக இந்தியா மாறவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் வெகு விரைவில் அமெரிக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு இணையாக மாறும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அதிவேகத்தில் கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு இணையான தேசிய நெடுஞ்சாலைகளை இந்தியா பெறும் என நான் நம்புகிறேன்.

ஒரு சமயத்தில் நாம் ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் மட்டுமே சாலைகளை அமைத்து வந்தோம். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 38 கிலோ மீட்டர் சாலைகளை நாம் அமைத்து கொண்டுள்ளோம்'' என்றார். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது (National Highways Authority of India - NHAI) சமீபத்தில் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

இதன்படி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும்போது, ட்ரோன்கள் மூலம் அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்த பிறகும், வீடியோவை பதிவு செய்யும் வேலைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தபடி இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை தரமாகவும், அதே நேரத்தில் வேகமாகவும் கட்டமைக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடப்பாண்டு மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இதன்படி 25.54 கிலோ மீட்டர் சிங்கிள் லேன் சாலையை கட்டமைக்கும் பணிகளை வெறும் 18 மணி நேரத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறைவு செய்துள்ளது. இது உலக சாதனை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் கையில் எடுத்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஒன்றிய அரசும் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியையும், காற்று மாசுபாடு பிரச்னையையும் குறைக்க வேண்டும் என்பது இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

ஆனால் பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது இதில் ஒன்று. ஆனால் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முயற்சி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக இருக்கும்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலை உயர்வால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவிந்துள்ள முன்பதிவுகளின் எண்ணிக்கை, பொதுமக்கள் எந்த அளவிற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரும்புகின்றனர் என்பதை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

அத்துடன் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடைசியாக தெரிவித்த தகவல்களின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் குவிந்துள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications