46 கி.மீ பயணிக்க 5 மணி நேரம்... இந்தியாவின் ஆமை வேக ரயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இந்திய ரயில்வே வேகமான ரயில்களை அறிமுகப்படுத்திவரும் நிலையில் ஆமை வேகத்தில் 46 கி.மீ பயணிக்க 5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் ரயிலும் இந்தியாவில் அதுவும் குறிப்பாகத் தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமான ஒரு பொது போக்குவரத்து வசதியாகும். குறைந்த பட்ஜெட்டில் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றது ரயில் பயணம் தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை இன்று ஆசியாவிலேயே மிக அதிகமான ஆட்களை பணியமர்த்தியுள்ள இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது. இன்று இந்த ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்த வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களை ரயில்வே நிர்வாகம் செயல்பாட்டிற்குக் கொண்டு வருகிறது.

புதிய ரயில்கள் எல்லாம் மணிக்கு 130-150 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்ட ரயில்களாக இருந்தாலும் இந்தியாவில் இன்றும் மிக மெதுவாகச் செல்லும் ரயில்களும் செயல்பாட்டில் தான் இருக்கிறது. அதைப் பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம். தமிழ் நாட்டில் உள்ள ஊட்டி மலை ரயில் தான் அது. இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் தான் இந்த ரயில் பாதை இருக்கிறது. இது தான் இந்தியாவிலேயே மிக மெதுவாக ரயில் இயங்கும் பாதையாகும்.
இந்த ரயில் சுமார் 46 கி.மீ தூரத்தை 5 மணி நேரமாகக் கடக்கிறது. சுமார் 10 கி.மீ வேகத்தில் தான் இந்த ரயில் பயணிக்கும். இது இந்தியாவின் வேகமான ரயிலைவிட 16 மடங்கு வேகம் குறைவாகும். இந்த ஊட்டி மலை ரயில் டார்ஜலின் ஹிமாலயன் ரயில் பாதையைப் போல யுனெஸ்கோவின் உலக புராதன சின்னமாக விளங்குகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இந்த ரயில் பயணிக்கிறது.
இந்த ஊட்டி மலை ரயிலுக்கான முதற்கட்ட பணி 1854லேயே துவங்கினாலும் மலைப் பாதையை உருவாக்குவதில் பல பிரச்சனைகள் வந்ததால் இந்த பணி 1891ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1908ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த ரயில் பல குகைகள், பாலங்கள் வழியாக 46 கி.மீ பயணிக்கிறது. பாறை நிறைந்த பகுதிகள்,குறுகிய மலையிடுக்குகள், தேயிலைத் தோட்டங்கள் எனப் பல வகையான நிலப் பரப்புகளில் இந்த ரயில் பயணிக்கிறது.
இந்த ஊட்டி மலைரயில் பெட்டிகள் மரத்தால் ஆனது. இதில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கிறது. முதல் வகுப்பில் 72 பயணிகளும், 2 ம் வகுப்பில் 100 பயணிகளும் பயணிக்க முடியும். 2016ம் ஆண்டு முதல் 4 கோச்கள் மொத்தம் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கான டிக்கெட் புக்கிங்கை ஐஆர்சிடிசி தளத்தில் புக்கிங் செய்யலாம். விடுமுறை நாட்கள், வாரயிறுதி நாட்களில் இந்த ரயிலுக்குக் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரடியாக ஸ்டேஷனிற்கு சென்றும் டிக்கெட் எடுக்கலாம். ஆனால் புக்கிங் செய்து செல்வது தான் சிறந்தது. இந்த ரயில் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








