ஆக.16ம் தேதி நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை! டிக்கெட் கட்டணம் இவ்வளவு கம்மியா?
இலங்கை காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டிணம் இடையே பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி துவங்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த ரூட்டில் பல்வேறு முறை கப்பல் சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் இது ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் இந்த பகுதியில் கப்பல் சேவை துவங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் நாகப்பட்டிணம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பலை இயக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த சேவையை துவங்க கடந்த ஆண்டு ஏற்பாடு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி இந்த சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்ந்து நடைபெறவில்லை.

பல்வேறு விதமான காரணங்களால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த சேவையை மீண்டும் துவங்க பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் சில காலத்துக்கு பிறகு இந்த சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் வரும் 16ம் தேதி முதல் இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் பகுதிக்கு கப்பல் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை சிவகங்கை கப்பலை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்கள்.
இந்த கப்பலில் மொத்தம் 133 இருக்கைகள் சாதாரண வகுப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூபாய் 5000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோக பிஸ்னஸ் கிளாஸ் சீட்டாக 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூபாய் 7500 கட்டணமாக வசூல் செய்யப்படவுள்ளது.
மேலும் இந்த பயணத்தின் போது பயணிகள் உணவுகளைப் பெற்றுக் கொள்ள துரித உணவக வசதியும் கப்பல் உள்ளேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் பெரும் உணவுக்கு அவர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கப்பலில் பயணம் செய்யும் பயணி இந்த கப்பலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுத்து விட்டால், அவர் 60 கிலோ எடை வரையிலான பொருட்களை எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 5 கிலோ எடை கொண்ட பொருட்களை மட்டும் கைப்பையாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த கப்பலுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் காலமும் துவங்கி விட்டது. இந்த கப்பலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தப் படகு வழியாக பயணிக்கும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் மட்டும் போதுமானது. விசா எடுக்க வேண்டிய தேவை இல்லை. இந்த சர்வீஸ் வழியாக இலங்கைக்குள் நுழையும் அனைவருக்கும் விசா இல்லாமல் இலங்கைக்குள் வளம் வர அனுமதி இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக இந்த சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் வழியாக சென்னையில் இருந்து ஜாஃப்னா வரை பயணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூபாய் 8000 டிக்கெட் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த கப்பல் சேவை வழியாக பயணித்தால் ரூபாய் 5000 டிக்கெட் கட்டணத்திலேயே பயணம் செய்து விட முடியும். இதனால் இது இலங்கைக்கு குறைந்த விலையில் பயணம் செய்யும் முறையாக பார்க்கப்படுகிறது.
இந்தியா- இலங்கை இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்த சேவை துவங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே இந்த சேவை தொடர்ந்து வழங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து இரு நாடுகளும் சமரசமாக இந்த கப்பல் சேவையை துவங்கினால், நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலிருந்து இலங்கை மிக அருகில் இருந்தாலும், இந்தியர்களுக்கும் இலங்கையில் உள்ள மக்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறது. இந்த தூரத்தை குறைக்க வேண்டும் என்றால் இரு நாடுகளுக்கும் இடையேயான குறைந்த கட்டண போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்த கப்பல் போக்குவரத்து சேவை மிக முக்கியமான பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








