இந்தியா-இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்தி வைப்பு! உண்மையான காரணம் இது தான்!
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையில் உள்ள காங்சேசன்துறைக்கு இன்று அறிவிக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கப்பலில் பயணிக்க டிக்கெட் புக் செய்திருந்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்து கொள்ளலாம் அல்லது தேதியை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையில் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை பகுதிக்கு சிறு கப்பல் இயக்க இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அரசுகள் முயற்சி செய்தன. இதன்படி கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் இயக்கப்பட்டது.

இது இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தமிழகத்திலிருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு செல்பவர்களும் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களும் இதை அதிகம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த சிறிய கப்பல் போக்குவரத்தில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படவில்லை.
இந்த கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்ட 2வது நாளே வெறும் 7 பேர் மட்டுமே இந்த கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்திருந்தார்கள். இதனால் இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் பின்பு தினந்தோறும் இருந்த இந்த கப்பல் போக்குவரத்து சேவை வாரத்தில் மூன்று நாட்களுக்கு என குறைக்கப்பட்டது. இருந்தாலும் இதில் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையே கடந்து 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் கனமழை காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் மீண்டும் துவங்கப்படாமலேயே இருந்தது. கடந்த ஜனவரி மாதம் மீண்டும் துவங்கப்படும் என்ற பேச்சு எழுந்த நிலையில் அப்பொழுதும் துவங்கப்படவில்லை. இந்நிலையில். இன்று மே 13ம் தேதி இந்த கப்பல் சேவையை மீண்டும் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இந்த முறை நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரை பயணிப்பதற்கு சிவகங்கை என்ற கப்பலை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கப்பல் அந்தமானில் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. அந்தமானில் உள்ள இந்த கப்பல் கடந்த 10ம் தேதியே தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியாக வந்தால் உடனடியாக சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கப்பல் வரவில்லை. இதில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூ4,997 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து சேவையை நடத்தும் தனியார் அமைப்பு இந்த சேவையை துவங்கும் தேதியை மீண்டும் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று துவங்கவிருந்த இந்த சேவை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 17ம் தேதி வரை இந்த சேவையை பயன்படுத்த டிக்கெட் புக் செய்த பயணிகள் எல்லாம் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்து டிக்கெட்டிற்காக செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
ஒருவேளை அந்த பயணிகள் 17ம் தேதிக்கு பிறகு தங்கள் பயணத்தை மாற்ற திட்டமிட்டால் ஏற்கனவே புக் செய்த டிக்கெட்டில் தேதியை மட்டும் மாற்றி புக் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இல்லாததற்கு முக்கியமான காரணமாக விசா பிரச்சினை பேசப்பட்டது. இலங்கைக்கு செல்ல விசா கிடைப்பதில் சிக்கல் இருந்ததன் காரணமாக இந்த சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் இந்த இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த சேவையை தனியார் நிறுவனத்திலும் ஒப்படைத்து தனியார் நிறுவனம் இந்த சேவையை நடத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தை வைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த படகு வழியாக பயணித்தால் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும் இந்த கப்பலில் இலங்கைக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா-இலங்கை இடையே மிகக் குறைவான விலையில் இந்த கப்பல் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததற்கு முக்கியமான காரணம் இந்த சேவை எந்த அளவிற்கு மக்கள் பயன்படுத்த முடியும் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த பயணத்தின் மூலம் மக்களுக்கு எந்த வகையில் சுற்றுலா திட்டமிடலாம் இலங்கைக்கு செல்வதால் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அரசு ஏற்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








