இதெல்லாம் வேற லெவல்... ஃப்ளக்ஸ் இன்ஜின்களுக்கு அனுமதி... அரபு நாடுகளின் தலையில் இடியை இறக்கிய இந்தியா!
அரபு நாடுகளின் தலையில் இந்தியா இடியை இறக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எத்தனால் சார்ந்த ஃப்ளக்ஸ் இன்ஜின்களை அனுமதிப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இத்தகவலை கூறினார்.

பசுமை வாகனங்களும், புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானவை என கருதப்பட்டு வரும் நிலையில், இது உண்மையிலேயே பெரிய செய்தியாகும். அடுத்த மூன்று மாதங்களில் இதற்கான திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பிரேசில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஏற்கனவே இத்தகைய ஃப்ளக்ஸ் இன்ஜின்கள் இருந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த மாற்று எரிபொருட்களில் இயங்கும் இத்தகைய வாகனங்களை பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் கச்சா எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறையும் எனவும், மேலும் இத்தகைய எரிபொருட்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னை குறையும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் எத்தனாலின் விலை 60-62 ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் 100 சதவீத எத்தனால் பங்க்குகளை அமைப்பதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''கரும்பு சாறு மொலாஸஸில் இருந்து நம்மால் எத்தனால் தயாரிக்க முடியும். ஆனால் அரிசி, சோளம் போன்ற உணவு தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கும் அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கி வருகிறது'' என்றார். இந்தியாவில் தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசலுடன் 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் மற்றும் பஜாஜ் போன்ற நிறுவனங்கள் இத்தகைய எரிபொருளில் இயங்கும் டூவீலர்களை ஏற்கனவே தயாரித்து விட்டன. அதே நேரத்தில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டால், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு வாகனங்கள் இந்தியாவில் தொடர்ச்சியாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கலாம்.

உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகதான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








