பெயர்தான் ரோமியோ... ஆனா நிஜத்தில் வேட்டை மன்னன்... இந்தியாவின் புது ஹெலிகாப்டரால் சீனா, பாக்,. உதறல்
இந்தியாவின் புதிய வேட்டை மன்னன் ரோமியோ ஹெலிகாப்டர்களால் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதறல் எடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணம் இனிதே நிறைவடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக, அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி இந்தியாவிற்கு வந்த அவர், நேற்று (பிப்ரவரி 25) தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு மீண்டும் அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிற்கு இந்தியாவில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். டொனல்டு ட்ரம்ப்பின் வருகையால், இந்தியாவிற்கு என்ன லாபம்? என தற்போது காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டுள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதில், பாதுகாப்பு துறை தொடர்பான ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு ஏற்ப, அமெரிக்காவின் ரோமியோ ஹெலிகாப்டர்களை (Romeo Helicopters) இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்படி அமெரிக்காவிடம் இருந்து சிக்கோர்ஸ்கி எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களை (Sikorsky MH-60R Romeo Helicopters) இந்தியா வாங்கவிருக்கிறது. எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் சிக்கோர்ஸ்கி ஏர்கிராஃப்ட் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அதே அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் கீழ் சிக்கோர்ஸ்கி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) என்பது உலகம் முழுக்க பிரபலமாக உள்ள ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஆகும். இதன் கீழ் ஏராளமான துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் சிக்கோர்ஸ்கி ஏர்கிராஃப்ட். இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள் அதிநவீன செயல்திறன் வாய்ந்தவை.

எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படையில் (Indian Navy) சேர்க்கப்படும். எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களின் வருகையால், இந்திய கடற்படையின் பலம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் இந்திய கடற்படை நவீனமயமாகும். எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடும் திறன் எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களுக்கு உள்ளது.

எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்கள் ரோமியோ என்ற பிரபலமான பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆழ்கடலில் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடுவதில், எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர் நிபுணத்துவம் பெற்றது. தற்போதைய நிலையில், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடுவதற்கான கூடுதல் வல்லமை இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.

எனவேதான் அமெரிக்காவிடம் இருந்து எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. எதிரி நாடுகளின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடுவதற்காக, எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களில் ஏவுகணைகள் இருக்கும். இதில், ஹெல்ஃபயர் ஏவுகணைகள் (Hellfire Missiles) வழங்கப்பட்டுள்ளன.

நீர்மூழ்கி கப்பல்கள் கடலில் எந்த ஆழத்தில் பதுங்கியிருந்தாலும், எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள் அசால்டாக கண்டறிந்து துவம்சம் செய்து விடும். அதற்கேற்ப அதிநவீன வசதிகளை எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள் பெற்றுள்ளன. இதுதவிர சென்சார்கள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளும் எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தேடுதல் வேட்டைக்கும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியும். அத்துடன் மீட்பு பணிகளில் ஈடுபடக்கூடிய திறனையும், எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள் பெற்றிருப்பது சிறப்பானது. எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள் அதிகபட்சமாக மணிக்கு 267 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறக்க கூடியவை. இதன் ரேஞ்ச் 834 கிலோ மீட்டர்கள்.

எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களின் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 10,659 கிலோ. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் உள்ளது. தேவைப்பட்டால் இந்த இரண்டு நாடுகளுக்கும் எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்.
Image Courtesy: Lockheed Martin


Click it and Unblock the Notifications








