மலைவாழ், கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதம்.. முதல் முறையாக இந்தியாவில் போர்ட்டபிள் பெட்ரோல் பங்க்
மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்புதலை, மத்திய எரிபொருள் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்புதலை, மத்திய எரிபொருள் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. எரிபொருள் துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இந்த முடிவு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் புதிது புதிதாய் பெட்ரோல் பங்குகள் முளைத்து கொண்டே உள்ளன.

இந்தியா முழுவதும் தற்போது சுமார் 63,000 பெட்ரோல் பங்குகள் உள்ளன. எனினும் தேவை அதிகமாக இருப்பதால், பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை, எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன.

இந்தியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளை அமைக்க மிக அதிக அளவிலான இடம் தேவை. அதுமட்டுமின்றி அத்தகைய பெட்ரோல் பங்குகளை கட்டமைக்க, அதிக காலம் பிடிக்கிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருப்பது போர்ட்டபிள் (Portable) பெட்ரோல் பங்குகள்தான்.

உலகம் முழுவதும் தற்போது 35 நாடுகளில், போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. என்றாலும் இந்தியாவிற்கு இந்த தொழில்நுட்பம் மிக மிக புதிது. இந்தியாவில் தற்போது வரை போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் கிடையாது.

எனினும் தற்போது இந்தியாவிலும், போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படுவதற்கான காலம் கனிந்திருக்கிறது. செக்குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரோகார்டு நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை அமைக்க, டெல்லியை சேர்ந்த அலின்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அனுமதியை மத்திய எரிபொருள் துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதியே வழங்கி விட்டது. எனவே போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கான யூனிட்களை அமைக்கும் பணியில், அலின்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து அலின்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் இந்தீர்ஜித் ப்ரூத் கூறுகையில், ''போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் யூனிட்களை அமைப்பதற்காக, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நாடு முழுவதும் 4 முதல் 7 யூனிட்கள் வரை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு யூனிட்டிற்கும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்றார். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்காக 50,000 போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளை உருவாக்க அலின்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போர்ட்டபிள் பெட்ரோல் பங்க் யூனிட்டை அமைக்கவோ அல்லது அகற்றவோ வெறும் 2 மணி நேரம் போதும். இதற்கான செலவும் குறைவுதான். ஒவ்வொரு போர்ட்டபிள் பெட்ரோல் பங்கின் கொள்ளளவும் மாறுபடும். இதில், 9,000 லிட்டர் முதல் 35,000 லிட்டர் வரையிலான எரிபொருளை சேமித்து வைக்கலாம்.

மலைப்பிரதேசங்கள், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகள் வரப்பிரசாதமாக அமையும். ஏனெனில் அங்கு தேவைப்பட்டால், வெறும் 2 மணி நேரத்தில், போர்ட்டபிள் பெட்ரோல் பங்க்கை அமைத்து விட முடியும். இதற்கு தேவைப்படும் நில அளவு, மிக மிக குறைவு.

போர்ட்டபிள் பெட்ரோல் பங்குகளில், ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, நாமே தேவையான எரிபொருளை நிரப்பி கொள்ளலாம். இங்கு முதற்கட்டமாக பெட்ரோல் மற்றும் டீசலும், பின்னர் எல்பிஜி உள்ளிட்ட எரிபொருட்களும் விற்பனை செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications