விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்
பூடானில் அத்துமீறி நடந்து கொண்ட இந்திய பைக் ரைடர் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடான் இந்திய சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது. குறிப்பாக பூடானுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. பூடானின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயைதான் நம்பியுள்ளது.

பூடானுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பலர் தங்கள் சொந்த வாகனங்களை அந்த நாட்டுக்கு எடுத்து சென்று ஓட்டுவதை அதிகம் விரும்புகின்றனர். இந்த சூழலில் பூடானுக்கு மோட்டார்சைக்கிள் மூலம் சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் தற்போது பூடான் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தரக்குறைவாகவும், ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டதே இதற்கு காரணம்.

சோர்டென் (Chorten) மீது ஏறியதால்தான் இந்திய பைக் ரைடரை பூடான் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். டோச்சுலா பாஸ் எனும் இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதியாகும். இங்கே செல்ல வேண்டுமென்றால் பூடான் அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோர்டென் என்பது புத்த மத கோயில் ஆகும். பூடான் மற்றும் திபெத் போன்ற நாடுகளில் அதிக அளவிலான சோர்டென்கள் உள்ளன. உண்மையில் இந்தியாவின் லடாக் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளிலும் கூட அதிக அளவிலான சோர்டென்கள் இருக்கின்றன. சோர்டென்கள் ஸ்டூபா (Stupa) எனவும் அறியப்படுகின்றன.

இப்படி மக்களால் மதிக்கப்படும் புனித தலத்தின் மீது ஏறியதால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பைக் ரைடரின் பெயர் அபிஜித் ரத்தன் ஹஜாரே என கண்டறியப்பட்டுள்ளது. இவர் மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். இந்தியாவில் இருந்து 15 பேர் கொண்ட குழு பைக்கில் பூடானுக்கு சென்றுள்ளது. அதில் ஒருவராக அபிஜித் ரத்தன் ஹஜாரேவும் சென்றுள்ளார்.

இந்த குழுவை பூடானை சேர்ந்த டூர் கைடு ஒருவர் வழிநடத்தியுள்ளார். சோர்டென் மீது தான் ஏறி நிற்கும் புகைப்படத்தை அபிஜித் ரத்தன் ஹஜாரே வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இதனை கண்ட நெட்டிசன்கள் கொதித்து விட்டனர். அபிஜித் ரத்தன் ஹஜாரேவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
எனவே அபிஜித் ரத்தன் ஹஜாரேவை கண்டறியும் பணியில், ராயல் பூடான் போலீஸ் ஈடுபட்டது. இதன் முடிவில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அபிஜித் ரத்தன் ஹஜாரேவின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை ராயல் பூடான் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விசாரணை முடியும் வரை பூடானை விட்டு வெளியேற அவர் அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், அபிஜித் ரத்தன் ஹஜாரேவின் செயல் குறித்து, உள்ளூர் டூர் கைடுக்கு எதுவும் தெரியாது என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தபோது, பைக்குகளை பாதுகாப்பாக பார்க்கிங் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் பூடானை சேர்ந்த மற்றொரு நபர், சோர்டென் மீது ஏற அபிஜித் ரத்தன் ஹஜாரேவிற்கு உதவி செய்துள்ளார். அவர் ஒரு கார்பெண்டர் எனவும், அங்கு சோர்டென்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த கார்பெண்டரை கண்டறியும் பணியில் பூடான் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இந்திய பைக் ரைடருக்கு என்னவிதமான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது அல்லது வழங்கப்படும் என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அந்த நாடுகளின் கலாச்சாரம் மற்றும் மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

ஆனால் அபிஜித் ரத்தன் ஹஜாரே அதனை மீறி நடந்து கொண்டுள்ளார். தங்கள் நாட்டுக்கு வரும் பைக் ரைடர்களுக்கான விதிமுறைகளை பூடான் ஏற்கனவே கடுமையாக்கியிருந்தது. தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் காரணமாக பூடான் அரசு இன்னும் சட்டத்தை கடுமையாக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
Note: Final 4 Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications