ஒரு கைக்கடிகாரம் மொத்தத்தையும் மாற்றி போட்டுடுச்சு! அமெரிக்காவில் இந்திய தொழிலதிபரின் ஸ்மார்ட் மூவ்!!
தொழிற்நுட்பங்கள் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி ஆனது அபரிதனமானது. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் செயற்கைக்கோள்களின் உதவியுடன், இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே மொபைல் போனில் பார்க்க முடிகிறது. அதிநவீன தொழிற்நுட்பங்கள் மூலமாக விபத்துகள் தவிர்க்கப்பட்டு, பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது கை கடிகாரத்தின் மூலமாக கார் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கார் விபத்துகளுக்கு அமெரிக்கா பெயர் போனது என கூறலாம். அமெரிக்காவில் எந்த பகுதியில் வசித்தாலும், வாரத்திற்கு குறைந்தது ஒரு கார் விபத்தை ஆவது பார்த்துவிட முடியும். மக்கள் வசிக்கும் நகரத்திற்குள் மட்டுமின்றி, இந்தியாவை போன்று அமெரிக்காவில் நெடுஞ்சாலைகளிலும் அதிக விபத்துகள் பதிவாகுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு, அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் ஐ5 என்கிற முற்றிலுமாக குடியிருப்புகளோ அல்லது கட்டிடங்களோ இல்லாத பகுதியில் நெடுஞ்சாலையில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் குல்தீப் தன்கர் என்பவரது கார் சேதாரமாகி உள்ளது. தன்கரின் காருக்கு பின்னால் ஓல்டு-ஜென்ரேஷன் ஹோண்டா அக்கார்ட் காரில் வந்தவர்கள் குல்தீப் தன்கரது காரின் பின்பக்கத்தில் மோதி உள்ளனர்.
இந்த மோதலில் தன்கரது விலையுயர்ந்த கார் சற்றே சேதமடைந்த நிலையில், இவரது காரின் பின்னால் மோதிய பழைய ஹோண்டா அக்கார்ட் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்துக்கு ஹோண்டா அக்கார்ட் கார் தான் காரணம் என்றாலும், எதனால் இந்த விபத்து நடந்தது என்பது தெரியவில்லை. இந்த கார் விபத்தை குல்தீப் தன்கர் தனது எக்ஸ் தளத்தில் போட்டோ உடன் வெளியிட்டுள்ளார்.
இந்த எக்ஸ் பதிவை அவர் வெளியிட்டதற்கு முக்கிய காரணம், சம்பவத்தின்போது அவர் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தை பெருமையாக கூறுவதற்கு ஆகும். ஏனெனில், விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிக்காமல் இருக்கவும், விபத்துக்கு பின் அவர்களால் தன்கருக்கு எந்த துன்புறுத்தல்களும் ஏற்படாத வண்ணம் உடனடியாக போலீசாருக்கு போன் செய்தது தன்கர் கிடையாது; அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் ஆகும்.
விபத்து என்று உணர்ந்த உடனேயே ஆப்பிள் வாட்ச் தன்னிச்சையாக 911 எண்ணிற்கு அழைத்து போலீசாரை சில நிமிடங்களில் விபத்து நடந்த இடத்திற்கு வரவழைத்துள்ளது. இதன் மூலமாக விபத்து நடைபெற்று 30 நிமிடங்களில் குல்தீப் தன்கர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைத்து அங்கிருந்து தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பிவிட்டார்.

இதற்காக, ஆப்பிள் நிறுவனத்தையும், கலிஃபோர்னியா நெடுஞ்சாலை போலீசாரையும் மென்ஷன் செய்து தனது எக்ஸ் பதிவில் குல்தீப் தன்கர் பாராட்டியுள்ளார். கார் விபத்தில் சிக்கியது ஆப்பிள் வாட்ச்சுக்கு எப்படி தெரிந்தது? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆப்பிள் வாட்சுக்கு விபத்தில் கார் சிக்கியது எல்லாம் தெரியாது. வாட்ச்சை அணிந்திருப்பவர் ஏதேனும் விபத்தில் சிக்கினால் மட்டுமே அதனால் உணர முடியும். அதாவது, ஒருவேளை தன்கர் நடந்து சென்ற போது விபத்தில் சிக்கியிருந்தாலும் இவ்வாறே போலீசாரை அழைத்திருக்கும்.
இதற்காக, வாட்ச்சில் ஆக்ஸலேரோமீட்டர் மற்றும் ஜிரோஸ்கோப் என்கிற இரு தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மனிதனின் அசைவை வைத்து அவர்கள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, அணிந்திருக்கும் மனிதனுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கும். அதற்கு அந்த நபர் பதிலளித்துவிட்டால் பிரச்சனையில்லை. அதுவே, அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால், தன்னிச்சையாக அவசர உதவி எண்ணுக்கு போன் செய்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எது எப்போது நடக்கும் என்றே தெரியாத இந்த உலகில் பாதுகாப்பாக இருக்க எதிர்காலத்தில் ஆப்பிள் வாட்ச் போன்ற கருவிகள் அவசியமான ஒன்றாக இருக்கும். இந்த சம்பவத்தில் நாம் பார்த்த இந்திய வம்சாவளியான குல்தீப் தன்கர் அமெரிக்காவில் லாஸ்ட்9.ஐஒ என்கிற தொழிற்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். அவரால், இத்தகைய ஆப்பிள் வாட்ச்சை எளிதாக வாங்க முடிந்துள்ளது. ஆனால், எல்லாராலும் வாங்க கூடிய விலையில் ஆப்பிள் வாட்ச் இல்லை.


Click it and Unblock the Notifications








