தேனிலவுக்கு சென்ற இந்திய இளம் ஜோடி!! போலீஸாரிடம் சிக்கியது எதனால்? கணவர் போட்ட தப்புக் கணக்கு!
பொது சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் கட்டாயம் அவசியமான ஒன்று. இது நம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்படும் முறை ஆகும். ஏனெனில், முறையான பயிற்சி பெற்று, சோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கினால் மட்டுமே சாலைகளில் பாதுகாப்பு நிலவும்.
ஓட்டுனர் உரிம சான்றிதழை பெற்றுவிட்டால், நாட்டில் எங்கு வேண்டுமாயின் வாகனங்களை ஓட்டலாம். அதுவே, இந்தியாவை தாண்டி வெளிநாடுகளில் வாகனம் ஓட்டுவதாக இருந்தால், சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற வேண்டும். அத்தகைய ஓட்டுனர் உரிமத்தை இந்தியாவில் இருந்துக் கொண்டே பெறலாம். அது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பதிவிட்டுள்ளோம்.

அதேநேரம், இந்திய ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தியே சில வெளிநாடுகளில் வாகனங்களை ஓட்டலாம். அவ்வாறு, நம் இந்திய ஓட்டுனர் உரிமத்தை அங்கீகரிக்கக்கூடிய நாடுகளுள் ஒன்று நியூசிலாந்து. இந்த நாட்டுக்கு செல்வோர் பெரும்பாலும் அங்கு வாடகைக்கு கிடைக்கும் கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், மனிதனால் கடைசியாக கண்டுப்பிடிக்க நாடுகளுள் ஒன்றான நியூசிலாந்தில் சுற்றிப் பார்ப்பதற்கான சுற்றுலா தளங்கள் அதிகம்.
இதனால், புதுமணம் முடிக்கும் தம்பதிகள் நியூசிலாந்துக்கு அதிகளவில் தேனிலவுக்கு செல்வது வழக்கம். இந்த வகையில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஒரு புதுமண தம்பதி தேனிலவுக்கு சென்றுள்ளது. அங்கு, வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்ட இந்த இந்திய இளம் தம்பதி, அந்த காரில் மிக வேகமாக பயணம் செய்துள்ளனர். இதனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஒருவர் கவனித்துவிட்டார்.

இதனை அடுத்து, காரை நிறுத்தி அந்த தம்பதியிடம் போலீஸார் விசாரணையை துவங்கி உள்ளார். அதனை கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். காருக்குள் ஓட்டுனர் இருக்கையில் இருந்தவரிடம், நியூசிலாந்தின் வேக வரம்பு எவ்வளவு என்று தெரியுமா என அந்த போலீஸ்காரர் கேட்பதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது.
போலீஸ்காரரின் இந்த கேள்விக்கு காருக்குள் இருந்த ஆண் நபர் 100kmph என தெரிவிக்க, ஆனால் நீங்கள் 140kmph வேகத்தில் காரை ஓட்டியதாக போலீஸ்காரர் தெரிவித்துள்ளார். காரை ஓட்டியது இந்த ஆண் நபர் தான். பின்னர், உங்களது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக 28 நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதாக போலீஸார் அந்த நபரிடம் தெரிவிப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனை கேட்ட அந்த நபரது முகம் மிகவும் கவலையாக மாறுவது வீடியோவில் தெரிகிறது.
நம்ம ஊரில் கேட்பதை போலவே, தன்னை இந்த ஒருமுறை மன்னித்துவிடும்படி எவ்வளவோ போலீஸாரிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் அந்த போலீஸ்காரர் எதற்கும் அசர்வது போல் தெரியவில்லை. நல்லவேளையாக, தம்பதி இருவரிடமும் ஓட்டுனர் உரிமம் இருந்துள்ளது. சட்டென யோசித்த அந்த ஆண் நபர், தனது மனைவி டிரைவிங்கில் பழக்கம் இல்லாதவர், ஆதலால் எனது ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக அவரது ஓட்டுனர் உரிமத்தை இடைநீக்கம் செய்யுமாறு கேட்டுள்ளார்.
இதற்கும் அந்த போலீஸ்காரர் ஒத்துக் கொள்ளவில்லை, இதற்கு பதிலாக இருவரும் காரை விட்டு பேருந்தில் பயணிக்குமாறு தெரிவித்துள்ளார். அந்த ஆண் நபர் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் போலீஸ்காரர் மனம் இறங்கவில்லை. இறுதியாக, "உங்களது மனைவி காரை ஓட்டட்டும். நாங்கள் முன்னாள் செல்கிறோம். ஒருவேளை உங்கள் மனைவிக்கு போதிய நம்பிக்கை வரவில்லை எனில், இருவரும் பேருந்தில் செல்லுங்கள்" என கூறியுள்ளார்.

அத்துடன், "நீங்கள் வாகன ஓட்டுவது தெரிந்தால், உங்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்படும்" என அந்த ஆண் நபரிடம் மிரட்டும் தோரணையில் கூறிவிட்டு தனது காருக்கு சென்றுவிட்டார். இதனால், வேறு வழி இல்லாமல், அந்த பெண் அவர்களது டொயோட்டா கரோல்லா காரை ஓட்ட டிரைவர் இருக்கைக்கு வந்துள்ளார். போலீஸ் காருக்கு பின்னால் காரை ஓட்டிய அவரால், காரை 60kmph வேகத்திற்கு மேல் ஓட்ட முடியவில்லை. இதனை கண்ட போலீஸார் திருப்தியுடன் அங்கிருந்து சென்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தை பார்க்கும் சிலருக்கு, அந்த ஆண் நபர் கேட்பதை போல அவரது மனைவியின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்துவிட்டு, அவர்களை பயமின்றி பாதுகாப்பாக கார் ஓட்ட அனுமதித்து இருக்கலாமே என தோன்றலாம். ஆனால் அது தவறான செயல் ஆகும். இதேபோன்று, மற்றவர்களும், தவறை செய்துவிட்டு மற்றவர்களை காட்டி தப்பித்துவிடலாம். மேலும், இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் வாங்குவது எவ்வளவு எளிமையானதாக உள்ளது என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









