கடல்ல மீன் பிடிச்சுட்டு இருந்தவரு.. விலை உயர்ந்த பென்ஸ் காரை வாங்கிட்டாரு.. கடின உழைப்பால் கிடைத்த பரிசு
மீனவர் ஒருவர் மிகவும் காஸ்ட்லியான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீனவரின் இந்த கொள்முதல் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கையின் எந்த உச்சிக்கும் போக முடியும் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் செடான் (Mercedes-Benz C-Class sedan) ரக சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார். துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ205 நான்காம் தலைமுறை சி கிளாஸ் (W205 fourth-generation C-Class) கார் மாடல் ஆகும்.
இதன் மதிப்பு ரூ. 60 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இத்தகைய காஸ்ட்லியான காரையே மீனவர் வாங்கி இருக்கின்றார். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என தெரிகின்றது. மேலும், அவர் தமிழர் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், இப்போது அவர் மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரை வாங்கி இருப்பதும் மலேசியாவில் உள்ள டீலர் ஒருவர் வாயிலாகவே அவர் வாங்கி இருக்கின்றார். மீனவர் காரை வாங்கியதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்ற மாதிரியும், பின்னர் பென்ஸ் ஷோரூமிற்கு சென்று புதிய சொகுசு காரை வாங்குகின்ற மாதிரியான காட்சிகளுமே அந்த வீடியோவில் இடம் பிடித்திருக்கின்றன.
இந்த வீடியோவை தமிழ் வேர்ல்டு ஸ்டார் எனும் இன்ஸ்டா பக்கமே வெளியிட்டு இருக்கின்றது. உலக அளவில் பிரபலமான ஓர் ஆடம்பர கார் மாடலே சி கிளாஸ் ஆகும். இந்த கார் மாடலை உலக சந்தையில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
பெட்ரோல் எஞ்சினைக் கொண்ட தேர்வு சி200 என்கிற வேரியண்ட் பெயரிலும், டீசல் சி 220 சிடிஐ மற்றும் சி 250 டி என்கிற வேரியண்ட் பெயரிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் ஆப்ஷனில் 2.0 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 181 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும்.
டீசல் ஆப்ஷனில் 2.2 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், ஆற்றலை வெளிப்படுத்துவதில் இரண்டிற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும். சி 220 டி வேரியண்ட் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 250டி வேரியண்ட் 204 பிஎச்பி ஆற்றலையும் உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்தியாவில் சி கிளாஸ் மாடலின் ஏஎம்ஜி வெர்ஷன் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் மீனவர்கள் இதுபோன்று காஸ்ட்லியான காரை வாங்கும் சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் இதுமாதிரியான சம்பவம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. விவசாயிகளும் இதுபோன்று ஆடம்பர கார்களை நாட்டில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மீனவர் ஆடம்பர காரை வாங்கிய சம்பவம் இணையத்தில் மிகப் பெரிய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இது பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வாகனமாக பென்ஸ் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீனவர்கள் மற்றும் இன்னும் பலரால் பயன்படுத்த முடியும் என்கிற சூழல் உருவாகி இருப்பதே பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









