அதிரடி காட்டுவதற்கான வேலையை தொடங்கிய ஒன்றிய அரசு! கார்களின் விலை உயர போகுது! ஆனா எல்லாம் ஒரு நல்ல காரியமாதான்!
இந்தியாவில் கார்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் டிரைவர் மற்றும் முன் பகுதி பயணியின் இருக்கைகளுக்கு ஏர்பேக் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவதற்கான பணிகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக பணியாற்றி வரும் நிதின் கட்காரி, சிறிய மற்றும் விலை குறைவான கார்களிலும் போதுமான எண்ணிக்கையில் ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு கூறியிருந்தார். ஏனெனில் நடுத்தர வர்க்க மக்கள் இந்த கார்களைதான் வாங்குகின்றனர். அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருப்பதால், அமைச்சர் நிதின் கட்காரி இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த சூழலில்தான் தற்போது அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்தியாவில் கார்களின் விலை அதிகரிக்கும். கூடுதல் ஏர்பேக்குகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதால், விலை நிச்சயமாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் தற்போது விற்பனையாகும் பெரும்பாலான கார்களில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதில்லை. இதில், பிரபலமான கார்களும் அடங்கும். ஒன்றிய அரசு ஒருவேளை 6 ஏர்பேக்குகள் இடம்பெறுவதை கட்டாயமாக்கினால் இந்த கார்களின் விற்பனையை உற்பத்தி நிறுவனங்களால் நிறுத்த முடியாது. அதற்கு பதிலாக விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் 6 ஏர்பேக்குகளை கண்டிப்பாக வழங்கியாக வேண்டும்.

அவ்வாறு வழங்க வேண்டும் என்றால், கார்களில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். கார்களின் விலை அதிகரிக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். ஆனால் கார்களின் விலை உயரலாம் என்றாலும், பயணிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும் என்பதிலும் துளியும் சந்தேகமில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தியாவில் பெரும்பாலான கார்களில் நிறைய ஏர்பேக்குகள் வழங்கப்படாமல் இருப்பதற்கு விலைதான் மிக முக்கியமான காரணம். அதிக ஏர்பேக்குகளை வழங்கினால், கார்களின் விலை அதிகரித்து விடும். விலை உயர்ந்த கார்களால் சந்தையில் மிக நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாது.

ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். ஆனால் தற்போது அந்த விஷயத்தில் மாற்றம் தென்படுகிறது. கார்களில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு வசதிகளுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே அதிக பாதுகாப்பான கார்களாக கருதப்படும் டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் போன்ற கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் இங்கே வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் கார்களில் பயணிக்கும் பலர் சீட் பெல்ட்களை கூட அணிவதில்லை. குறிப்பாக பின் பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகள் பலருக்கு சீட் பெல்ட் அணியும் பழக்கமே கிடையாது. பின் பகுதியில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டியதில்லை என்று கூட பலர் கருதுகின்றனர். ஆனால் காரில் பயணிக்கும் அனைவருமே சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதுதான் விதிமுறை.

சீட் பெல்ட் அணிவதன் மூலம் சாலை விபத்துக்களின்போது படுகாயம் ஏற்படுவதையும், உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தடுக்கலாம். இதற்கிடையே புதிதாக விற்பனைக்கு வரும் கார் என்றால், 6 ஏர்பேக்குகளை வழங்குவது எளிது. ஆனால் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார் என்றால், நாங்கள் ஏற்கனவே கூறியபடி, 6 ஏர்பேக்குகளை வழங்குவதற்கு நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். எனவே இந்த விதிமுறையை அமலுக்கு கொண்டு வருவதாக இருந்தால், கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications