பயோ எத்தனாலின் விலை ரூ.65 மட்டுமே!! ‘நெகிழ்வு-எரிபொருள்’ வாகனங்களை கட்டாயமாக்கும் ஒன்றிய அரசு!
'நெகிழ்வு-எரிபொருள்' வாகனங்கள் எனப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட எரிபொருள்கள் மூலமாக இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிக்க அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவை பிறப்பிக்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. இதுகுறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் & டீசல் விலை உயர்வு நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. இதனை சமாளிக்க மத்தியில் ஆளும் ஒன்றிய அரசாங்கம் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படியே தற்போது, அடுத்த 3-இல் இருந்து 4 மாதங்களில், நெகிழ்வு என்ஜின்களுடன் (ஒன்றிற்கு மேற்பட்ட எரிபொருள்களில் இயங்கக்கூடியது) வாகனங்களை உருவாக்க அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிட உள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த 2021 செப்டம்பர் மாத துவக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தற்போதைய 2022ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவதற்கு உள்ளாக நெகிழ்வு எரிபொருள் வாகனங்களுக்கான வழிக்காட்டுதல்களை அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.

தற்போது அளித்த பேட்டியில், நெகிழ்வான இயந்திர விதிமுறைகளுடன் வாகனங்களை கொண்டுவர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம். நெகிழ்வு-எரிபொருள் என்ஜின்களை கட்டாயமாக்குவோம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காற்று மாசை ஏற்படுத்தக்கூடிய என்ஜின்களின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக கொண்டுவரப்படும் இந்த நடவடிக்கை, பெட்ரோல் விலை அதிகரிப்பினால் வருத்தத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் செலவை குறைக்கும் விதமாக அமையும் எனவும் நிதின் கட்கரி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போதைக்கு இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.110ஐ நெருக்கி கொண்டிருக்கிறது. ஆனால் பை எத்தனாலின் விலை ரூ.65 மட்டுமே. இதை மனதில் வைத்தே வாடிக்கையாளர்களின் எரிபொருள் செலவை குறைக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த எரிபொருள் அந்நிய செல்வாணியை சேமிப்பது மட்டுமின்றி, காற்று மாசுப்படுதலையும் குறைக்கும்.

மாநிலங்களில் இயங்கும் எண்ணெய் வணிக நிறுவனங்கள் தங்களது அதே பெட்ரோல் & டீசல் கட்டமைப்பு வசதியில் பயோ-எரிபொருள்களை விற்பனை செய்ய ஏற்கனவே தயாராக துவங்கிவிட்டன என கூறும் நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து அமைச்சகம் ரெயில்வே, மெட்ரோ மற்றும் நீண்ட தூரம் இயங்கும் பேருந்துகளையும் பசுமை ஹைட்ரஜனில் கொண்டுவர திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர், பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் மற்றும் எரிபொருள் செல் வாகன தொழிற்நுட்பங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று இணையானவை. இவை இரண்டும் 2050ஆம் ஆண்டிற்குள் நாட்டில் புதைபடிவ-எரிபொருள் பயன்பாட்டை முந்தும் என்றார்.

அமைச்சர் கூறுவதை போல், தற்போதைய புதைவடிவ (பெட்ரோல் & டீசல்)-எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக நெகிழ்வு-எரிபொருள் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களே வேகமாக பெருகி வருகின்றன. இந்த மாற்றத்தை உடனடியாக சில நிறுவனங்கள் ஏற்றுகொண்டாலும், சில நிறுவனங்கள் இன்னும் குழப்பமான மனநிலையுடனே இருக்கின்றன.

ஏனெனில் வாகனத்தின் அடிப்படை பண்பை மாற்ற வேண்டுமென்றால், பல விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இவ்வளவு ஏன், பிராண்டின் அடிப்படை தத்துவத்தை கூட மாற்ற வேண்டியிருக்கலாம். இவை எல்லாம் தான் சில நிறுவனங்களுக்கு மிகுந்த குழப்பத்தையும், பயத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த பயத்தையும், மன குழப்பத்தையும் தவிர்க்கவே ஏகப்பட்ட மானியங்களை ஒன்றிய அரசாங்கமும், அந்தந்த மாநில அரசாங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அறிவித்து வருகின்றன. இதில் குஜராத் மாநில அரசாங்கம் பல கவர்ச்சிக்கரமான மானிய சலுகைகளை அறிவித்து பல எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தங்கள் மாநிலம் பக்கம் இழுத்து வருகிறது.

மானிய அறிவிப்புகளினால் புதியதாக பல நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் ஈடுப்பட துவங்கி இருந்தாலும், இன்னும் பெரும்பாலான முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முழுமையாக எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கவில்லை.

உதாரணத்திற்கு ஹீரோ மோட்டோகார்ப். இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2022 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








