பெட்ரோல் பங்குகளுக்கு இணையாக வருகிறது மின்வாகன சார்ஜிங் நிலையம்: மத்திய அரசு அதிரடி!
மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிமீ தூரத்திற்கும் ஒரு மின்வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருன்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் அல்லாத வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்காத மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, மக்களுக்கு முன்னோடியாக விளங்கும் வகையில், பொதுத்துறையில் இயங்கும் வாகனங்களை மின்வாகன மயமாக மாற்றும் முயற்சியிலும் பல்வேறு மாநிலங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அவ்வாறு, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மின் பஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதேப்போல தமிழக அரசும் மின் பஸ்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ஜெர்மன் நாட்டில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் கடனுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தமிழக பட்ஜெட் அறிக்கையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதையறிந்த மத்திய அரசு, மின்வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, மின்வாகனங்களை வாங்குபவர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் மானியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்வாகனங்களை வாங்க சுலப மாத தவனை, எளிமையான கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, ஆலோசனை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சார்ஜ் நிலைய பற்றாக்குறையை தீர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலையிலும் 25 கிமீ தூரத்துக்கு ஒரு மின்வாகன சார்ஜ் நிலையங்களை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் தனியார் வாகனங்களை கவரும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. மேலும், இதன்மூலம் நாட்டில் மின்வாகன பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து யூனியன் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மின்வாகன சார்ஜிங் நிலையங்களை கட்டமைப்பது குறித்தான தகவல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சார்ஜிங் நிலையங்களை எவ்வாறு அமைக்க வேண்டும், சட்ட திட்ட முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு 25 கிமீ தூரத்திற்கும் இரு பக்கங்களிலும் ஒரு மின்சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். அதேபோல மாநிலத்தின் முக்கிய நகரப் பகுதிகளிலும் இதுபோன்ற நிலையங்களை அமைக்க வேண்டும்" என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் அதாவது சராசரியாக இன்னும் பதினோறு ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மூலை முடுக்கிலும் மின்வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையானது, மக்களுக்கு மின்வாகனங்களை சார்ஜிங் செய்வதில் உள்ள இடையூறு நீக்கப்பட்டு, மின்வாகன பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications