பார்க்கும் இடங்களில் எல்லாம் தேசிய கொடி பறக்குது!! ஏரியாவில் மாஸ் காட்டும்போது இதெல்லாம் நினைவில் இருக்கட்டும்
இந்திய சுதந்திர தினம் (Indian Independence Day) இன்று. சில நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறி, நமக்கு சுதந்திரம் கொடுத்த நாள் இன்று. சுதந்திர தினம் என்றாலே நாடு முழுவதும், பார்க்கும் இடங்களில் எல்லாம் தேசிய கொடிகள் ஏதாவது ஒரு வடிவில் இருக்கும்.
குறிப்பாக, வாகனங்களில் தேசிய கொடியை கம்பீரமாக பறக்க விட்டப்படி பலர் சாலையில் செல்வதை பார்க்கலாம். இதற்காகவே, வருடாவருடம் ஏதாவது ஒரு குழு ஒரு வாரத்திற்கு முன்பாக இருந்தே தயாராகிவிடும். அத்தகையவர்களை உங்கள் பகுதியில் கூட பார்த்திருப்பீர்கள். அவ்வாறு, தேசிய சுதந்திர தினத்தை வாகனங்களில் தேசப்பற்றுடன் கொண்டாடுவது எவ்வாறு? என்கிற கேள்வி உங்களில் சிலருக்கு இருக்கலாம். வாருங்கள் அதனை விரிவாக இனி இந்த செய்தியில் விவாதிப்போம்.

கார் மற்றும் பைக்கை வைத்திருக்கும் உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கப்பக்கத்தினரிடம் சிறிய வாகன பேரணி குறித்து பேசி, அவர்களை ஒருங்கிணையுங்கள். அத்தகையவர்களுள் கார்/ பைக் ஆர்வலர்கள் இருந்தால் இன்னும் சிறப்பு. பேரணியில் ஈடுப்படுத்தப்படும் வாகனங்களை தேசிய கொடிகளாலும், தேசிய கொடியின் நிறங்களிலான பலூன்களாலும் அலங்கரிக்கவும். பேரணியில் முதலாவதாக செல்லவுள்ள வாகனத்தில் ஓர் பெரிய தேசிய கொடி இருந்தால் இன்னும் நல்லது.
அதேபோல், தேசிய கொடிகளுடன் பேரணி செல்லும் வாகனங்களில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்ற சுதந்திர போராளிகளின் படங்கள் அல்லது அவர்களது பெயர்களை குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டினால் பேரணி பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும். இவ்வாறான அலங்கரிப்புகள் வாகன பேரணியின் நோக்கத்தையும், பேரணியில் பங்கேற்பவர்களின் தேசப்பற்றையும் மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தும்.

முடிந்தால், பேரணியில் எதாவது ஒரு வாகனத்தை தேசிய கொடியின் மூவர்ணத்தில் பெயிண்ட் செய்யலாம். இருப்பினும், பேரணி நீண்ட தொலைவிற்கு இருக்க வேண்டாம். சில கிமீ தொலைவிற்கு இருந்தாலே போதுமானது. பேரணி என்றாலே குறைவான வேகத்தில்தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதால், வாகனங்கள் அவ்வளவாக செல்லாத சாலையை பேரணிக்கு தேர்வு செய்யுங்கள்.
வாகன பேரணியால், சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பது முக்கியமான விதி. அதற்கு பங்கம் விளையும் எனும்போது, பேரணியை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுவது கூட நல்லதுதான். ஜாலியன் வாலாபாக், செங்கோட்டை அல்லது சபர்மதி ஆசிரமம் போன்ற சுதந்திர போராட்ட காலத்தில் முக்கியமானதாக விளங்கிய பகுதி ஏதேனும் உங்கள் இருப்பிடத்திற்கு அருகே இருந்தால், அந்த பகுதி வரையில் வாகனங்களில் பேரணியாக சென்று வரலாம்.

தேசிய அல்லது மாநில அளவிலான பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கும், நாட்டின் இயற்கை வளத்தை குறிப்பிடும் வகையில் இயற்கை அழகு நிறைந்த பகுதிகளுக்கும் கூட வாகன பேரணியாக சென்றுவரலாம். பேரணி செல்லும் வாகனங்களில், மற்றவர்களை அச்சுறுத்தாத வகையில், நாட்டின் பாரம்பரியமிக்க இசை கருவிகள் மூலம் இசை கச்சேரிகளை நடத்தியவாறு செல்வது கூட சிறப்பாக இருக்கும்.
நம் இந்தியாவிற்கு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது. அதாவது, அன்றைய நள்ளிரவில் இரவோடு இரவாக ஆங்கிலேயர்கள் பெருமளவில் நம் நாட்டை விட்டு வெளியேறினர். இதனை குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் கூட வாகன பேரணியை நடத்தலாம். சாலைகளும் வெற்றிடமாக இருக்கும். ஆனால் இத்தகைய இரவு வாகன பேரணிக்கு சம்பந்தப்பட்ட போலீசாரிடம் முறையான அனுமதி கட்டாயம் வாங்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான வாகன பேரணி மூலம் நாட்டின் மீது எந்த அளவிற்கு அன்பையும், தேசப்பற்றையும் வைத்துள்ளோம் என்பதை வெளிக்காட்டலாம். அதுமட்டுமின்றி, தினசரி அலுவலக பணிகளுக்கு மத்தியில் ஓர் சிறிய இடைவேளை எடுத்தாற் போன்றும் இருக்கும். இருப்பினும், வாகனங்களில் பயணிக்கும்போது வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









