வாகன புகையில் இருந்து உயிர்களை காக்கும் இந்திய இளைஞரின் அடடே டிவைஸ்!
கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து இங்க் மற்றும் பெயிண்ட் கண்டறிந்து, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் இந்திய இளைஞர் அனிருத் சர்மா.
கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து இங்க் மற்றும் பெயிண்ட் கண்டறிந்து, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் இந்திய இளைஞர் அனிருத் சர்மா. இதன்மூலமாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிக மாசுபாடு நிறைந்த 12 நகரங்களின் பட்டியலை, உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) சமீபத்தில் வெளியிட்டது. இதில், 11 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

கான்பூர், ஃபரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டெல்லி, லக்னோ, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான் ஆகியவைதான் அந்த 11 நகரங்கள். காற்று மாசுபாட்டால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஊர்களை நகரங்கள் என்று சொல்வதற்கு பதிலாக நரகங்கள் என்று சொல்லலாம்.

இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து நாடுகளும் காற்று மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள 10ல் 9 பேர், அதிகளவில் மாசுபாடு அடைந்த காற்றைதான் சுவாசிக்கின்றனர்.

நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் தற்போது வரலாறு காணாத வகையில் காற்று மாசு ஏற்பட்டிருப்பது நாம் அறிந்ததுதான். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு அரசாங்கம் உத்தரவிடும் அளவிற்கு நிலைமை கையை மீறி சென்று கொண்டிருக்கிறது.

வாகனங்கள் வெளியிடும் புகைதான், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து பிரிண்டிங் இங்க் கண்டுபிடித்து சாதித்துள்ளார் அனிருத் சர்மா என்ற இந்திய இளைஞர். உலகிலேயே முதல் முறையாக புகையில் இருந்து இங்க் உருவாக்கப்பட்டுள்ளது!

அனிருத் சர்மா மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்துள்ள டிவைஸின் பெயர் காலிங்க். கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் புகையை வெளியிடும் டெயில் பைப்பில், இந்த டிவைஸை பொருத்தி விட வேண்டும். இன்ஜின் எரித்து வெளியிடும் கருப்பு கார்பன் புகைக்கரியை இந்த டிவைஸ் சேகரித்து கொள்ளும்.

அப்படி சேகரிக்கப்பட்ட கார்பன் புகைக்கரியை, பரிசோதனை கூடத்தில் வைத்து, பாதுகாப்பாக மறுசுழற்சி செய்கின்றனர். பின்னர் இதனை உயர்தரமான பிரிண்டிங் இங்க் ஆக மாற்றி விடுகின்றனர். டெயில் பைப் வெளியிடும் 95 சதவீத கார்பன் புகைக்கரியை காலிங்க் டிவைஸ் சேகரித்து விடும்.

இதன்மூலம் பிரிண்டிங் இங்க் கிடைக்கிறது. அதைவிட முக்கியமாக, கார்பன் புகைக்கரி காற்றில் கலப்பது தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. காலிங்க் டிவைஸ் பொருத்தப்பட்டுள்ள கார் 45 நிமிடங்கள் இயங்கினால், 30 மில்லி பிரிண்டிங் இங்க் (ஒரு பேனாவிற்கு போதுமானது) கிடைக்கும்.

காலிங்க் டிவைஸ் பொருத்தப்படுவதால், இன்ஜினின் செயல்பாட்டில் பிரச்னையும் ஏற்படாது. காலிங்க் டிவைஸ் நிரம்ப 2 வாரங்கள் ஆகும். இதன்மூலம் சேரிக்கப்படும் நுண் துகள்களானது கார்பன் பேங்க் எனப்படும் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருகையில், வெள்ளை நிற ஆடையில் அழுக்கு படிந்து, அவை நிறம் மாறுவதை கண்டுதான் அனிருத் சர்மாவிற்கு இந்த ஐடியாவே தோன்றியுள்ளது. அதன்பின் கார்பன் புகைக்கரியை எப்படி மறுசுழற்சி செய்வது? என 3 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்துள்ளார்.

நண்பர்களுடன் இணைந்து 3 ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியின் பயனாகதான், கார்பன் புகைக்கரியில் இருந்து, பல்வேறு விதமான இங்க் மற்றும் பெயிண்ட் தயாரிக்கும் யுக்தியை அனிருத் சர்மா கண்டறிந்துள்ளார். அத்துடன் நின்று விடாமல் அதனை விற்பனைக்கும் கொண்டு வந்து விட்டார்.

பெங்களூரு மற்றும் சிங்கப்பூரில், கிராவிக்கி லேப் என்ற நிறுவனத்தை அனிருத் சர்மா நிறுவியுள்ளார். இதன்மூலமாக காலிங்க் டிவைஸ் மூலம் உற்பத்தி செய்யப்படும் இங்க் மற்றும் இங்க் சார்ந்த கலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் அனிருத் சர்மா. இதற்கு 'ஏர் இங்க்' என பெயரிடப்பட்டுள்ளது.

காலிங்க் டிவைஸ் மூலமாக 'ஏர் இங்க்' தயாரித்ததில், இதுவரை 1.6 டிரில்லியன் லிட்டர் காற்று சுத்திகரிக்கப்பட்டுள்ளது. கார், பைக் மட்டுமல்லாமல், பஸ், படகு, ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றிலும் காலிங்க் டிவைஸை பொருத்தி, கார்பன் புகைக்கரியை சேகரிக்க முடியும்.

காலிங்க் டிவைஸை பயன்படுத்தினால், இந்தியாவின் காற்று மாசுபாட்டில் இருந்து உருவாக்கப்பட்ட இங்க் மற்றும் பெயிண்ட் மூலம் ஓவியம் வரைய முடியும்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications