அட்டாரி - வாகா எல்லை கேட்டின் மீது மோதிய மர்ம ஸ்கார்ப்பியோ!!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா எல்லையில் அமைக்கப்பட்ட்டிருக்கும் கேட்டின் மீது இந்தியர் ஒருவர் ஸ்கார்ப்பியோ காரை மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திங்களன்று விடியற்காலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நுழைவு வாயிலாக வாகா-அட்டாரி கேட் அமைந்துள்ளது. இது தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான முறையான சாலை வழிதடங்களில், மிக முக்கியமானதாக உள்ளது.
பதட்டம் நிறைந்த இந்த பகுதியில் பல அடுக்கு பாதுகாப்போடு, 24 மணி நேரமும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் இருக்கிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தை ஒருவர் தனது காரை இந்த அட்டாரி- வாகா எல்லையிலுள்ள கேட்டின் மீது காரை மோதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்
பெயர் வெளியிடப்படாத அவர், கனடாவில் வாழும் அயல்நாடு வாழ் இந்தியராவார்.
இன்று அதிகாலையில், தனது எஸ்யூவிகாரில் வாகா எல்லைப்பகுதிக்கு அதிவேகமாக சென்றுள்ளார். சோதனைச் சாவடியை இடித்துத் தள்ளிவிட்டு, மின்னல் வேகத்தில் எல்லைக்கோட்டின் பூஜ்ய நிலை பகுதியில் அமைந்திருக்கும் கேட்டுகளின் மீது மோதியிருக்கிறார்.

சேதம்
இதனால், அட்டாரி- வாகா கேட் மிக மோசமான நிலையில் பாதிப்புகளுக்கு உள்ளானது.
இந்த எஸ்யூவி பாகிஸ்தான் எல்லைக்கு சென்று விட்டதால், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அந்த எஸ்யூவியை கைப்பற்றிவிட்டனர். வேகமாக காரை இயக்கிய இந்த இந்தியரை, இந்திய படையினர் கைது செய்துள்ளனர்.

வேண்டுகோள்
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளிடம், இந்திய பிஎஸ்எஃப் படையினர் முன் வைத்த வேண்டுகோளை அடுத்து, இந்த எஸ்யூவி, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கபட்டது.

விசாரணை
விசாரணையில், எஸ்யூவி கொண்டு இரு எல்லை கேட்களையும் மோதியவர் கனடாவில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, உரிய விளக்கம் அளிக்க, பிஎஸ்எஃப் அதிகாரிகளுக்கு, பஞ்ஜாப் ரேஞ்ஜர்ஸ் கடிதம் எழுதியுள்ளனர்.

திசை திருப்பும் தகவல்கள்;
முதலில், இந்த சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறபட்டது.
ஆனால், பிஎஸ்எஃப் உயர் அதிகாரி மூலம் பி.டி.ஐ-க்கு அளிக்கபட்ட பேட்டியின் படி, காரை கொண்டு எல்லை கோடு பகுதியில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர், பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் என்ற இடத்திற்கு தரிசனம் மேற்கொள்ள விரும்பியதாக தெரிகிறது.
ஆனால், இந்த விபத்து சம்பவத்தில் ஈடுபட்டவர், பாகிஸ்தான் செல்ல விசா உள்ளிட்ட நடைமுறைகளுக்காக காத்திராமல், முறையற்ற நடைமுறைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
மேலும், இவர் மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தாலும், விசாரணை இன்னும் இறுதி கட்டத்தை எட்டாத நிலையிலேயே நீடித்து வருகிறது.

தற்கொலை தாக்குதல்
கடந்த ஆண்டு அட்டாரி- வாகா எல்லையின் பாகிஸ்தான் பகுதியில் நடந்த தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர்.
இதனால், சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு அரண்களை தாண்டிச் சென்ற கார் எல்லை கேட்டில் மோதியது பெரும் பதட்டத்தையும், பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

சகஜநிலை
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரங்களில், மிக பதட்டமான நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தான், தீபாவளியை ஒட்டி, வாகா-அட்டாரி எல்லையில் பணியில் இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் வாழ்த்துகளையும், இனிப்புகளையும் பரிமாறி கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications








