ஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா?
ஹைதராபாத் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 100 ஆக்டேன் பிரீமியம் பெட்ரோலுக்கு, வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் பாக்கெட் நிறைய பணம் இருக்கிறதா? பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா? அப்படியானால் ஹைதரபாத் நகரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஒரு சில பெட்ரோல் பங்க்குகளுக்கு செல்லுங்கள். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இங்கு பிரீமியம் கிரேடு பெட்ரோலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பிரீமியம் கிரேடு பெட்ரோல் இன்ஜின் செயல்திறனை மேம்படுத்தும். அத்துடன் மனதிற்கு இனிய ஓட்டுதல் அனுபவத்தையும் இது வழங்கும். ஹைதராபாத் நகரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது 100 ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் (100 Octane Premium Petrol) ஆகும்.

இந்த பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 160 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இந்த பிரீமியம் கிரேடு பெட்ரோல், டெல்லி, குர்கான், நொய்டா, ஆக்ரா, ஜெய்ப்பூர், சண்டிகர், லூதியானா, மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இதன் விற்பனை ஹைதராபாத் நகரிலும் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் இந்த பிரீமியம் கிரேடு பெட்ரோலின் விலை ஒரே மாதிரியாக ஒரு லிட்டருக்கு 160 ரூபாய் என்றுதான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது இந்த எரிபொருளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் ராஜிவ் அமரம் கூறுகையில், ''100 ஆக்டேன் எரிபொருளுக்கு தற்போது வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்க்குகள் தினமும் 200 லிட்டர் முதல் 300 லிட்டர் வரை விற்பனை செய்து வருகின்றன'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ''மேம்பட்ட இன்ஜின் ஆயுள் மற்றும் வாகனங்களின் சிறந்த செயல்திறனுக்கு, பிராண்டட் எரிபொருளுக்கு மாறுவது சிறந்தது'' என்றார். இந்த பிரீமியம் கிரேடு பெட்ரோல், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான வாகனங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ''பிராண்டட் எரிபொருளின் ஹை-எண்ட் வெர்ஷன் வேகமான ஆக்ஸலரேஷனுக்கு உதவி செய்யும். அத்துடன் உமிழ்வு குறைவாக இருக்கும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இது இருக்கும். பெரும்பாலும் ஹை-எண்ட் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த எரிபொருள் ஏற்றதாக இருக்கும்'' என்றனர்.

அதாவது விலை உயர்ந்த வாகனங்களுக்கு இந்த எரிபொருள் பொருத்தமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் முன்பெல்லாம் சூப்பர் பைக்குகள் மற்றும் சூப்பர் கார்களை பார்ப்பது என்பதே அரிதான ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் இந்திய சந்தையில் தற்போது அத்தகைய வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








