ஒரு லிட்டர் ரூ. 160... சென்னையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய பெட்ரோல்... இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நாட்டிலேயே முதல் முறையாக 100 ஒக்டோன் தரத்திலான பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) செவ்வாய்கிழமை (1 நவம்பர்) நாட்டின் முதல் 100 ஆக்டேன் பெட்ரோலை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் ஆயில் வர்த்தகத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் வகையில் இந்த சிறந்த தரமான எரிபொருளை ஐஓசி அறிமுகப்படுத்தியது.

இந்த ஆயிலின் அறிமுகத்தின்போது பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது, "எக்ஸ்பி100 பிரீமியம் பெட்ரோல் முதல் கட்டமாக நாட்டின் குறிப்பிட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. டெல்லி, குருகிராம், நொய்டா, ஆக்ரா, ஜெய்பூர், சண்டிகர், லூதியான, மும்பை, புனே மற்றும் அஹமதாபாத் ஆகிய 10 நகரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன" என்றார்.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் வைத்தே புதிய பிரீமியம் எரிபொருள் தயாரிக்கப்படுகின்றது. இங்கிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆயில் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. இந்த புதிய ஆயில் உயர் ரக லக்சுரி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கானதாகும். ஆம், சூப்பர் கார் மற்றும் பைக்குகளின் திறனையும், பவரையும் கூட்ட இந்த ஆயில் உதவும்.

குறிப்பாக, அதிக வேக ஆக்சலரேஷன், சிறந்த ஓட்டும் அனுபவம் உள்ளிட்டவற்றை வழங்க இது உதவுகின்றது. இதுமட்டுமின்றி எரிபொருள் சிக்கனத்திற்கும் இது வழி வகுக்கும். இதன் மூலம் எந்திரத்தின் ஆயுளையும் அதிகரிக்கச் செய்ய முடியும். இதுமட்டுமின்றி, இந்த ஆயில் சுற்றுச் சூழலுக்கும் நண்பனாக இருக்கும். அதாவது குறைந்த மாசு உமிழ்வையே இது வெளிப்படுத்தும்.

அமெரிக்கா, ஜெர்மன், கிரீஸ், இந்தோனேசியா, மலேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மட்டுமே 100 ஆக்டேன் பெட்ரோல் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதன் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

100 ஒக்டோன் என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கலாம். இது பெட்ரோலின் தரத்தைக் குறிக்கும் குறி பெயராகும். தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் 87 (வழக்கமானது), 89 (நடுத்தரம்), மற்றும் 91-94 (பிரீமியம்) ஆகிய குறியீடு கொண்ட ஆக்டேன் அளவுகளிலேயே எரிபொருள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இந்த நிலையில் முதல் முறையாக ஐஓசி அதிக தரம் (100 ஆக்டேன்) கொண்ட பெட்ரோலை அறிமுகம் செய்திருக்கின்றது. இது சந்தையில் எக்ஸ்பி100 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். விரைவில் இந்த ஆயில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இரண்டாம் கட்டமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








