ஆபத்தான நேரத்தில் தோள் கொடுத்து உதவும் சவுதி அரேபியா... இந்தியாவிற்காக செய்யும் காரியம் இதுதான்...
ஆபத்தான நேரத்தில் இந்தியாவிற்கு தோள் கொடுத்து உதவி செய்ய சவுதி அரேபியா முன் வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஈரான் உடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ம் ஆண்டின் மத்தியில் அமெரிக்கா விலகியது. இதன் பின் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. மீறினால் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா பயமுறுத்தியது.

இருந்தபோதும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் கூடுதலாக 6 மாத கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியது. ஆனால் அந்த 6 மாத கால அவகாசமும் கடந்த மே 1ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இனி கூடுதலாக சலுகை வழங்க முடியாது எனவும் அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்கினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அதே சமயம் அமெரிக்காவின் உத்தரவை மீறினால் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த பிரச்னையை சமாளிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்யின் இழப்பை ஈடுகட்டும் வகையில், வேறு நாடுகளிடம் இருந்து கூடுதல் சப்ளையை பெற இந்தியா முயன்று வருகிறது.

இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சவுதி அரேபியாவை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம், ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வழங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சவுதி அராம்கோ வழங்கவுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஏகே சர்மா இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''வரும் ஜூலை மாதம் முதல் 6 மாத காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வாங்கி கொள்வதாக சவுதி அராம்கோவிடம் தெரிவித்துள்ளோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்'' என்றார்.

முன்னதாக இந்திய நிறுவனங்களை கடந்த மாதமே சவுதி அராம்கோ அணுகியிருந்தது. அப்போது ஈரான் கச்சா எண்ணெய் இழப்பை ஈடு கட்டும் வகையில் நாங்கள் கூடுதலாக சப்ளை செய்கிறோம் என சவுதி அராம்கோ நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications