மும்பை- டெல்லி இடையே மிக அதிவேக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகமாகிறது!
மும்பை- டெல்லி வழித்தடத்தில் மிக அதிவேக ராஜ்தானி ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலமாக, இந்த இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
மும்பை- டெல்லி இடையே நாட்டின் மிக அதிவேகமான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ரயில் குறித்த கூடுதல் தகவல்களஐ இந்த செய்தியில் காணலாம்.

அதிவேக ரயில் சேவைகளை அறிமுகம் செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த அடிப்படையில், அதிவேகத்தில் செல்லும் திறன் படைத்த நவீன பெட்டிகள் கொண்ட புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை- டெல்லி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்த ரயில் சேவைக்கு வர இருக்கிறது.

மும்பை- டெல்லி இடையிலான வழித்தடத்தில் தற்போது இரண்டு ராஜ்தானி ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆகஸ்ட் கிராந்தி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மும்பை சென்ட்ரல்- புதுடெல்லி இடையே இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை பந்த்ரா- புதுடெல்லி இடையில் மூன்றாவது அதிவேக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில் 13 மணிநேரத்தில் இரு நகரங்களையும் கடக்கும். இதன்மூலமாக, பயண நேரம் வழக்கமான ராஜ்தானி ரயிலைவிட இரண்டரை மணி நேரம் குறையும்.

இந்த புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்எச்பி என்ற நவீன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரயில் பெட்டிகள் அதிவேகத்தில் ஓடும் திறன் படைத்தது என்பதுடன், தடம் பிறழாமல் செல்லும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.

மேலும், ரயில் விபத்தில் சிக்கினால் பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகம் வரை இயக்க அனுமதிக்கப்படும்.இதனால், இந்த ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 95 கிமீ என்ற அளவில் இருக்கும்.

அடுத்த சில தினங்களில் இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 24 பெட்டிகள் வரை கோர்க்கப்பட்டு, இரண்டு ரயில் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும்.

ஆனால், புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 பெட்டிகள் மட்டுமே கோர்க்கப்பட்டு, ஒரு ரயில் எஞ்சின் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இரண்டு ரயில்களின் செயல்திறன் மற்றும் வேகத்தை கணக்கிட்டு, புதிய ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்.

தற்போது 6 நிறுத்தங்கள் வரை கொடுக்கப்படுகிறது. ஆனால், புதிய ரயிலுக்கு இரண்டு அல்லது மூன்று நிறுத்தங்கள் மட்டுமே கொடுக்கப்படும். இதே வழித்தடங்களில் மிக அதிவேக ரயில்களை இயக்குவதற்கும் ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








