Railway Restore AC 3 Tier : ஏழைகளுக்கான ஏசி பெட்டிகளை மீண்டும் ரயில்களில் இணைக்கும் இந்திய ரயில்வே!
ரயில்களில் ஏசி பெட்டியில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். பலர் அதில் பயணித்திருப்பார்கள். சிலர் டிக்கெட் விலை அதிகம் காரணமாகப் பயணிக்க முடியாமல் இருப்பார்கள். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஏழைகளுக்கான ஏசியை பெட்டியை மீண்டும் ரயில்களில் இணைக்கும் முடிவை எடுத்துள்ளது. ஏழைகளுக்கான ஏசி பெட்டியா? அது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இந்திய ரயில்வே நிர்வாகம் 3 டயர் ஏசி பெட்டியில் எகனாமி வகுப்பு பெட்டியைக் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. அந்த பெட்டியில் சைடு சீட்டர் பகுதியிலும் 3 அடுக்கு பெர்த் இருக்கும். இதனால் சுமார் 72 பேர் பயணம் செய்யும் பெட்டியில் 83 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் குறைந்த விலையில் டிக்கெட்டை வழங்க முடிந்தது.

இதற்காக 3E என்ற தனி வகுப்பை உருவாக்கி அதன் மூலம் இந்த பெட்டிகளுக்கான புக்கிங்கை செய்து வந்தது. முதலில் இந்த வகுப்பில் பயணிகளுக்குப் போர்வை வழங்கப்படவில்லை. அப்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எந்த பெட்டியிலும் போர்வைகள் வழங்கப்படாமல் இருந்தது. பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும். போர்வைகள் வழங்கப்பட்டது.
ஆனால் 3டயர் ஏசி எகனாமி பெட்டியில் போர்வைகள் வழங்க டிக்கெட் விலையை ரூ 60-70 அதிகமாக்கியது. ஏற்கனவே ஏசி எகனாமி வகுப்பில் 3 டயர் ஏசி டிக்கெட்டை விட 6-7 சதவீதம் தான் டிக்கெட் விலை குறைவாக இருந்தது. தற்போது போர்வைக்கான விலையைப் போட்டதும் இரண்டும் ஒரே விலைக்கு வந்ததுவிட்டது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த 3ம் வகுப்பு ஏசி எகனாமி பெட்டிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. இந்த பெட்டிகள் வடிவமைக்கப்படும் போதே 3 டயர் ஏசி பெட்டிகளை விட அதிக வசதிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இதை மீண்டும் 3 டயர் ஏசி பெட்டிகளாக மாற்றிப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் தனது முடிவை மாற்றி இந்த பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த பெட்டிகளை மீண்டும் 3 டயர் ஏசி பெட்டிகளாக மாற்ற அதிக செலவாவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி பழைய விலையிலேயே போர்வையுடன் இந்த பெட்டிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மக்கள் போர்வைக்காக அதிகம் பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் முன்னரே சொன்னது படி இந்த 3 டயர் ஏசி எகனாமி பெட்டி, 3 டயர் ஏசி பெட்டிகளை விட அதிக வசதிகளைக் கொண்டது. இந்த பெட்டியில் மொத்தம் 83 பேர் பயணிக்க முடியும். இந்த பெட்டியில் சீட்கள் மற்றும் பெர்த்களின் டிசைன் மேலும் வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு வசதியாக மடித்துக்கொள்ளக்கூடிய ஸ்னாக்ஸ் டேபிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக 3 டயர் ஏசி பெட்டியிலேயே இல்லாத வசதியாக ஒவ்வொரு பெர்த்திற்கும் ஒரு ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஏசி வசதி தனி நபரின் கண்ட்ரோலில் இருக்கும். இது போக ஒவ்வொரு கோச்சிலும் மாற்றி திறனாளிகளுக்கான டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான டாய்லெட் பெரியதாகவும், இதன் வாசல் கூட பெரியதாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக ஒவ்வொரு சீட்டிற்கும் ஒரு ரீடிங் லேம்ப் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் பாய்ண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இரவு நேரத்தில் வெளிச்சம் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே நேரம் செல்போன், லேப்டாப்களை சார்ஜ் போட்டுக்கொள்ள முடியும்.3டயர் ஏசி பெட்டியை விட இதில் மிடில் மற்றும் அப்பர் பெர்த்தில் அதிக ஹெட் ரூம் வசதி இருக்கிறது.
இதனால் மக்கள் இந்த பெர்த்களில் பயணிக்கும் போது சிரமம் இல்லாமல் எழுந்து அமரவும், ஏறி இறங்கவும் முடியும். மேலும் இந்த பெட்டியை வடிவமைக்கும் போதே எளிதில் தீ பற்றிக்கொள்ளாத படியான பொருட்களைக் கொண்டே வடிவமைத்துள்ளனர். இதனால் தீவிபத்து ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். மேலும் மக்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் அப்பர் மற்றும் மிடில் பெர்த்களுக்கு ஏறும் ஏணிகளின் டிசைன் நவீனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களும் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும். பழைய மாடலில் சில பெண்கள் அதைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டி வந்தனர். சிலர் பயந்துவந்தனர். ஆனால் புதிய 3 டயர் ஏசி எகானமி கிளாஸ் இந்த பிரச்சனையைச் சரி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன : 3 டயர் ஏசி வகுப்பில் எகனாமிக் பெட்டிகளை அறிமுகப்படுத்தியது நல்ல விஷயம் தான். ஆனால் இதன் டிக்கெட் விலை ஏசி 3 டயர் டிக்கெட்களை விட 6-7 சதவீதம் தான் அதிகமாக இருக்கிறது. இதை மேலும் குறைத்தால்தான் சிலீப்பர் கிளாஸ் அல்லது முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு மட்டும் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இது கிடைக்கும். தற்போது இந்த விலை ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக லாபத்தை ஈட்டி கொடுப்பதைத் தவிர வேறு பெரிய மாற்றத்தைச் செய்யாது.


Click it and Unblock the Notifications