உங்களுக்காக கன்ஃபார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு ஒரு நபருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா?
நமக்காக கன்ஃபார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறொரு நபருக்கு மாற்றிக் கொள்ள முடியுமா என்பதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியன் ரயில்வேஸ் தன்னுடைய பயணிகளுக்கு சிறப்பு சேவையை வழங்கும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்தவகையில், தற்போது புதிதாக ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை பிற பயணிகளுக்கு மாற்றிவிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. வெகு நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த இந்த திட்டத்தை இந்தியன் ரயில்வே துறை அறிவித்திருப்பது ரயில் பயணிகள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட்டை பெறுவதே மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக, விழா போன்ற பண்டிகைக் காலங்களில் கன்ஃபார்ம் டிக்கெட்டை பெறுவது மிகவும் சவாலானது. இவ்வாறு பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் பெறப்படும் ரயில் பயணத்தை சில நேரங்களில் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ரத்து செய்ய வேண்டியிருக்கின்றது.

அவ்வாறு கன்ஃபார்ம் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது கணிசமான தொகைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. குறிப்பாக, பயண தேதி நெருக்கமாக இருக்கின்றபோது ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு பெரியளவில் பணம் திருப்பித் தரப்படுவதில்லை. பெருமளவிலான தொகை அபராதமாக கழிக்கப்பட்டு விடும் என்பதனாலயே கணிசமான தொகை மட்டும் நம் கைகளுக்கு வந்து சேருகின்றது.

ஆகையால், பெரும் தொகை வீணாகும் நிலை உள்ளது. இந்த நிலையை தவிர்க்கும் பொருட்டே இந்தியன் ரயில்வேஸ் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்கும் வசதியை அறிமுகம் தற்போது செய்திருக்கின்றது. ஆனால், இந்த டிக்கெட் மாற்றத்தை குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆமாங்க, குடும்ப உறுப்பினருக்கு அல்லாத ஓர் நபருக்கு நம்முடைய கன்ஃபார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொடுக்க முடியாது. தந்தை, தாய், சகோதரி, சகோதரன், மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொடுப்பது சாத்தியம் ஆகும்.

இந்த சேவையை பெற இன்னும் சில நிபந்தனைகளும் இருக்கின்றன. அதாவது, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக இந்த கோரிக்கையை எழுப்ப வேண்டும். இந்த நேரத்தைக் கடந்து விட்டால் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாது. மேலும், ஒரு நபரால் ஒரு முறை மட்டுமே பிறருக்கு தன்னுடைய டிக்கெட்டை மாற்றிக் கொடுக்க முடியும் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

தெளிவாக கூற வேண்டுமானால், ஏற்கனவே வேறு ஒரு நபருக்கு டிக்கெட் மாற்றப்பட்ட நிலையில், மறுபடியும், மாற்றப்பட்ட நபருக்கு பதிலாக மீண்டும் வேறொரு நபரை அந்த பயணத்திற்கு நியமிக்க முடியாது. ஒரு முறை மாற்றினால், மாற்றியதுதான். அடுத்தடுத்து என பயணியை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது.

ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினருக்கு மாற்றுவதற்கான வழிகாட்டுதல்:
- முதல் தேவை பயணத்திற்கான ரயில் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்.
- அடுத்த தேவை, டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அடையாள அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை.

மேலே கூறிய இரண்டும் உங்கள் கையில் இருக்கும் எனில் நேராக அருகில் இருக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தை அணுக வேண்டும். அங்கு ரயில் நிலை ஊழியர்கள் உங்களின் ரயில் பயண டிக்கெட்டை வேறொரு நபருக்கு மாற்றும் பணியை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

அதேநேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாக நேரம் இருக்கின்றது. ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னதாகவே நாம் இந்த செயலுக்காக முன்பதிவு மையங்களை அணுக வேண்டும். சிறிது நேரம் தவறினாலும் ஊழியர்கள் டிக்கெட் மாற்றம் செய்ய தவிர்த்துவிடுவார்கள். இதைத்தொடர்ந்து, டிக்கெட் டிரான்ஸ்ஃபரை பெற்ற நபர் பயணத்தின்போது உறிய அடையாள அட்டையைக் கொண்டிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








