சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு!!
சொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, 7 நட்சத்திர வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படும் சொகுசு ரயில்களில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நட்சத்திர விடுதிகளில் இருப்பது போன்ற வசதிகளுடன் பல சுற்றுலா ரயில்களை இந்திய ரயில்வேத் துறை இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் ஓர் இரவு பயணிப்பதற்கு லட்சங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதத்தில் இந்த சிறப்பு சொகுசு ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும். இந்த ரயில்களில் ரெஸ்டாரண்ட், தனி படுக்கை அறை, குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், உபசரணைகளும் நடத்திர விடுதிகளுக்கு இணையாக இருக்கின்றன.

இந்த சுற்றுலா ரயில்களில் பயணிப்பதற்கு வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், இந்த சுற்றுலா ரயில்களில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது. மேலும், கட்டணம் அதிகம் இருப்பதால், பயணிகள் மத்தியிலும் அதிக வரவேற்பு இல்லாத நிலை இருக்கிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு இந்திய ரயில்வேத் துறை முடிவு செய்தது. அதன்படி, சுற்றுலா ரயில்களில் கட்டணம் 50 சதவீதம் அளவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

சுற்றுலாவை இணைந்து நடத்தும் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் தொகையை இந்திய ரயில்வேத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால், பயணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

பேலஸ் ஆன் வீல்ஸ், கோல்டன் சாரியாட், மஹாராஜா எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிசி மற்றும் ராயல் ஓரியண்ட் ஆகிய சுற்றுலா ரயில்களில் ஏழு நாட்கள் கொண்ட சுற்றுலாவிற்கு ஒருவருக்கு ரூ.7.56 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இனி ரூ.3.63 லட்சமாக கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இன்னமும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

இதுவும் மிக அதிகம்தான். குழுவாக வருவோர் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களுக்கு கட்டணத்தை வெகுவாக குறைத்தால், இந்த ரயில்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா ரயில்கள் மட்டுமின்றி, சலூன் என்று குறிப்பிடப்படும் சொகுசு ரயில் பெட்டியை முன்பதிவு செய்து பயன்படுத்துவதற்கும் விசேஷ திட்டங்களை இந்திய ரயில்வேத் துறை வழங்குகிறது. இந்த சலூன் ரயில் பெட்டிகளில் இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, கழிவறை ஆகிய வசதிகள் இருக்கும். இந்த பெட்டிகளில் இரண்டு குடும்பத்தினர் பயணிக்க ஏதுவாக இருக்கும்.

அதேநேரத்தில், இந்த சலூன் பெட்டிகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் வழக்கமான ரயில்களில் மட்டுமே இணைக்க முடியும். எனவே, ஓர் இரவு பயணத்திற்கு மட்டுமே முன்பதிவு செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








