கார்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேக விரைவு சரக்கு ரயில் அறிமுகம்!
இந்தியாவில் அதிகம் பேர் பணியாற்றும் மிகப்பெரிய துறை ரயில்வே. நம் நாட்டின் ரயில் சேவைகளைப் பற்றி என்னதான் மோசமாக விமர்சித்தாலும், அதிருப்தி வெளிப்படுத்தினாலும், அதை நம்பித்தான் கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்துக்கு அச்சாணியாக விளங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அதேபோல, நாளுக்கு நாள் ரயில்வே துறை மெல்ல வளர்ச்சிப் பாதையை எட்டிக் கொண்டுதான் வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது கார்களை கொண்டு செல்வதற்காக பிரத்யேகமான ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் சேவை
ஆட்டோ எக்ஸ்பிரஸ் எனப்படும் அந்த ரயில் சேவை முதல்முதலில் டெல்லி அருகிலுள்ள குருகிராம் [குர்கான்] மற்றும் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகிலுள்ள நிதுவாண்டா இடையே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விரைவான சேவை
பொதுவாகவே சரக்கு ரயில் என எடுத்துக் கொண்டால், அதற்கு குறிப்பிட்ட கால வரையறை எதுவும் வகுக்கப்படுவதில்லை. போக்குவரத்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அந்த ரயில்கள் இயக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கு போய்ச் சேரும். இதனால், சரியாக இத்தனை மணிக்கு சரக்கு ரயில் வந்து விடும் என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலையே உள்ளது.

கால அட்டவணை
ஆனால், ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயிலின் விசேஷமான அம்சம் என்னவென்றால் கால அட்டவணையைக் கடைப்பிடிப்பதுதான். இந்த நேரத்துக்கு வண்டி எடுக்க வேண்டும், இத்தனை மணிக்கு குறிப்பிட்ட ஊருக்கு சென்றடைய வேண்டும் என்பன போன்ற நேர அட்டவணை வகுக்கப்பட்டு, அதன் படி ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

சேவை விரிவாக்கம்
இந்த ரயில் மூலம் தற்போது மாதத்துக்கு 2,000 கார்கள் குருகிராம் - நிதுவாண்டா இடையே கொண்டு செல்லப்படுகிறது. அந்த எண்ணிக்கையை 6,000-ஆக உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரயிலின் வேகம்
மேலும், ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 100 கி்லோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இதனால் பயண நேரம் குறையக் கூடும். குருகிராம் - நிவண்டா இடையே இயக்கப்படும் சரக்கு ரயில்களின் பயண நேரம் தற்போது சராசரியாக 70 மணி நேரமாக உள்ளது. ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த கால அளவு 54 மணி நேரமாகக் குறையும்.

டெலிவிரி
கார் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் மட்டுமின்றி, சீக்கிரமாகவே டெலிவிரி கொடுக்கும் வாய்ப்பையும் இந்த ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வழங்கும்.

பாதுகாப்பு
மழை, வெயில் படாமல் மூடப்பட்ட சரக்குப் பெட்டிகளில் கார்கள் எடுத்துச் செல்லப்படுவதால் மிகவும் பாதுகாப்பாக கார்களை பரிமாற்றும் வசதி கிடைத்திருக்கிறது. டிரக்குகளில் எடுத்துச் செல்வதை விட மிக பாதுகாப்பானதாக கருத முடியும்.

விரைவான போக்குவரத்து
இந்த ஆட்டோ எக்ஸ்பிரஸ் மூலமாக வடமாநிலத்தில் உற்பத்தியாகும் கார்கள் தென்மாநிலங்களில் உள்ள டீலர்களுக்கும், சென்னை உள்பட தென்மாநிலங்களில் உற்பத்தியாகும் கார்கள் வடமாநிலங்களுக்கும் மிக விரைவாக பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பயன் ஏராளம்
இந்த ஆட்டோ எக்ஸ்பிரஸ் மூலம் டிரக்குகளில் எடுத்துச் செல்வதைவிட எரிபொருள் சிக்கனம், கால விரயம், சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு ஆகியவை வெகுவாக குறையும்.

வருவாய் அதிகரிக்கும்
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், மக்கள்தொகையைப் போலவே ஆட்டோ மொபைல் துறையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வருவதில் ஆட்டோ மொபைல் துறையும் ஒன்று. சரக்கு ரயில் மூலம் கார்களைக் கொண்டு செல்வதன் மூலம் ரயில்வே துறையின் வருவாய் பெருகும் என்றார்.
மொத்தத்தில், அரசுத் துறையுடன் தனியார் பங்களிப்பும் இணைந்தால் அதன் வளர்ச்சி துரிதமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








