சூப்பர் கண்டுபிடிப்பு... சாதாரண சைக்கிளில் வித்தை காட்டிய இந்திய ரயில்வே அதிகாரி... என்னனு தெரியுமா?
சாதாரண சைக்கிளில் மாற்றங்களை செய்து அசத்தலான கண்டுபிடிப்பு ஒன்றை இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

உலகில் மிகப்பெரிய ரயில்வே துறைகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஒரு இடத்தை ரயில் கடப்பதற்கு முன்னதாக தண்டவாளங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அதேபோல் தண்டவாளங்களில் பழுது ஏற்பட்டால், ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்றாக வேண்டும்.

இந்த இரு பணிகளையும் செய்வதற்கு ரயில்வே ஆய்வு வண்டிகளை (Rail Inspection Cart) ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் இல்லாத பட்சத்தில், ரயில்வே ஊழியர்கள் நடந்துதான் சென்றாக வேண்டும். இது கால விரயத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரச்னைகளை சரி செய்வதற்காக, இந்திய ரயில்வே துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரால், இலகு ரக ரயில்வே சைக்கிள் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சாலையில் மட்டுமே ஓட்டக்கூடிய சைக்கிளை, ரயில்வே தண்டவாளத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்துள்ளனர். இந்த சைக்கிள் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேற்கு ஆஜ்மீர் மூத்த கோட்ட பொறியாளர் (Sr DEN - Senior Divisional Engineer) பங்கஜ் சோயின் என்பவர்தான் இந்த கண்டுபிடிப்பிற்கு பின்னால் இருக்கும் மனிதர். இந்த ரயில்வே சைக்கிளின் எடை 20 கிலோ மட்டுமே. எடை மிகவும் குறைவு என்பதால், மிக எளிதாக தண்டவாளத்திற்கு கொண்டு வந்து பயணிக்க முடியும். தண்டவாளத்தில் இருந்து எளிதாக எடுக்கவும் முடியும்.

ஒரே ஒரு நபரே இதனை எளிதாக செய்து விட முடியும். இந்த சைக்கிளின் சராசரி வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆகும். அதே சமயம் ஒருவரால் அதிகபட்சமாக மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்க முடியும். சாலையில் ஓடும் மற்ற சைக்கிள்களை போலவே, ரயில்வே சைக்கிளும் இரண்டு பேரை சுமந்து செல்லும் திறனை பெற்றுள்ளது.

2 பேர் அமர்ந்து சென்றாலும், சீரான வேகத்தை பராமரிக்க முடியும். சைக்கிளை வாங்கியது, அதில் மாற்றம் செய்தது என அனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வெறும் 5,000 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. ரயில்வே பணிமனையில் இந்த தனித்துவமான சைக்கிளை உருவாக்க முடியும். இந்த ரயில்வே சைக்கிள் தண்டவாளத்தில் எப்படி ஓடும்? எப்படி உருவாக்கப்பட்டது? என்பதை கீழே காணொளியில் காணலாம்.
ஊழியர்களின் விலை மதிப்பில்லாத நேரத்தை சேமிப்பதற்கு இந்த ரயில்வே சைக்கிள் உதவி செய்யும். இந்த சைக்கிள் மூலம் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை எளிதாக சென்றடையலாம். ரயில்வே ஆய்வு வண்டிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. நடந்து செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தண்டவாளங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் இந்த ரயில்வே சைக்கிள் உதவும்.

சேவையில் இல்லாத ரயில் வண்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட பழைய சக்கரங்கள் மற்றும் இரண்டு இலகு ரக இரும்பு குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த ரயில்வே சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான முறையில் நட்டு, போல்ட் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் சமயங்களில் சைக்கிளில் இதனை பொருத்தி கொள்வதும், அகற்றுவதும் எளிது.


Click it and Unblock the Notifications








