புதிய வெர்ஷனில் அறிமுகமாகப் போகும் வந்தே பாரத் ரயில்.. ஆனா நம்ம யாரும் அதில் பயணிக்க முடியாது...
முற்றிலுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் புதிய வெர்ஷனாக சரக்கு ரயிலை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இந்திய ரயில்வே இறங்கியுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ள மிகப்பெரிய மாற்றம் வந்தே பாரத் ரயில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் வழக்கமான ரயிலைவிட அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில்கள் தற்போது ஒவ்வொரு ரூட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள ரயில் பெட்டிகள் எல்லாம் அதிக எடை காரணமாக அதிக வேகத்தில் செல்லமுடியாமல் இருந்தது. அதனால் வந்தே பாரத் ரயில் குறைந்த எடையில் அதிக வேகமாகப் பயணிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ரயில்கள் பயணிகளின் பயன்பாட்டிற்காக மட்டுமே உள்ளது. இந்திய ரயில்வே பயணிகள் ரயில்களை மட்டுமல்லாமல் சரக்கு ரயில்களையும் இயக்கி வருகிறது. இதில் பல நிறுவனங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களை எடுத்துச் செல்ல சரக்கு ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சரக்கு ரயில்களும் குறைவான வேகத்தில் இயங்கும் ரயில்களாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்களில் சரக்கு ரயில்கள் வெர்ஷனை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காகச் சரக்கு ரயில்களுக்கான பிரத்தியேக பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் ரயில்வே துறையில் உள்ள பொது மேலாளர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்காக ஏற்கனவே அதிக அளவில் சரக்கு ரயில்களைப் பயன்படுத்தி பொருட்களை அனுப்பும் நபர்களை அழைத்து அவர்களின் தேவை மற்றும் வசதி குறித்த விபரங்கள் கேட்டறியப்பட்டன. அவர்களுக்குத் தேவைக்கு இணங்க இந்த சரக்கு பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த சரக்கு பெட்டிகள் 1800 மிமீ அகலம் கொண்ட ரேக்கள், ஆட்டோமெட்டிக் ஸ்லைடிங் டோர்ஸ் உள்ளிட்ட வசதிகளும் பால் உள்ளிட்ட குளிர் பதப்படுத்தி எடுத்துச்சொல்லக்கூடிய பொருட்களையும் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட குளிர் பதன சரக்கு பெட்டிகளும் இந்த ரயிலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இது போகச் சரக்குகளை எளிதாக ஏற்றி இறக்க ரோலர் ஃப்ளோர் சிஸ்டம், லாக்கிங் பேலட்களுக்கான லாக்கிங் வசதி ஆகியவையும் இந்த ரயிலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த ரயில் மொத்தம் 16 பெட்டிகளில் 264 டன் எடை வரை எடுத்துச் செல்லமுடியும்.

இதில் பெரும்பாலான வசதிகள் ஏற்கனவே உள்ள சரக்கு ரயில் பெட்டியில் உள்ளது. சிலவசதிகளை அதிலே மாற்றம் கொண்டு வந்து செய்ய முடியும் என்றாலும் இந்த ரயிலுக்கான ஸ்பெஷல் இதன் வேகம் தான் இவ்வளவு எடையுடன் இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

இதனால் சரக்கை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகக் கொண்டு செல்ல முடியும், அதுவும் குறைந்த செலவில் இது சாத்தியம் என்பதால் பலர் இந்த சேவையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையை அறிமுகப்படுத்துவதற்காக ஒவ்வொரு சோனல் மற்றும் டிவிசனல் அளவிலும் வழக்கமாக ரயில்கள் மூலம் சரக்குகளை அனுப்பும் நபர்களுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது.

அவர்களுக்கு தேவையான அளவு, மற்றும் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை சரக்கு அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது, எங்கிருந்து எங்கெல்லாம் சரக்குகளை அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல தகவல்களைக் கேட்டுப் பெறப்படுகிறது.

இந்த தகவல்கள் மூலம் இந்த சரக்கு சேவையை எந்தெந்த பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தலாம், என ரயில்வே மூத்த அதிகாரிகள் முடிவு செய்வார்கள். முதற்கட்டமாக டில்லி மற்றும் மும்பை பகுதிகளில் இது அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








