மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் தீவிரம்!
மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
அதிவேக ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிரமாக இறங்கியிருப்பது தெரிந்ததே. உடனடி தீர்வாக, மணிக்கு 200 கிமீ வேகம் வரை ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அடுத்து, ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை- ஆமதாபாத் இடையே மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

புல்லட் ரயிலைவிட வேகம்
இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் அடுத்த கட்ட முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது. அதாவது, புல்லட் ரயிலைவிட வேகமாக செல்லும் மாக்லேவ் ரயிலை இயக்குவதற்கான முயற்சிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மாக்லேவ் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்துடன் இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

நவீன நுட்பம்
உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே மாக்லேவ் ரயில் தொழில்நுட்பம் உள்ளது. இவை புல்லட் ரயில்களைவிட வேகமாக செல்லும். அதாவது, மணிக்கு 500 கிமீ வேகம் வரை இந்த மாக்லேவ் ரயில்களை இயக்க முடியும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 600 கிமீ வேகத்தை தாண்டிச் சென்று மாக்லேவ் ரயில் சாதனை படைத்தது.

சக்கரங்கள் இருக்காது
மாக்லேவ் ரயில்கள் காந்தபுல விசையில் இயங்குபவை. அதாவது, இந்த ரயில்களில் சக்கரங்கள் இருக்காது. தண்டவாளத்தின் மீது செல்லாமல், தண்டவாளத்தின் மேல் சில மிமீ இடைவெளியில் மேலே காந்த விசையின் மூலமாக செல்லும்.

சொகுசான பயணம்
உராய்வு குறைவதால் அதிர்வுகள் இல்லாத சொகுசான அதேசமயத்தில் மிக விரைவான போக்குவரத்தை இவை வழங்கும். மேலும், புல்லட் ரயிலைவிட 25 சதவீதம் அளவுக்கு எரிபொருள் செலவு குறைவாக இருக்கும்.

தானியங்கி நுட்பம்
புல்லட் ரயில்களைவிட இவை 5 சதவீதம் அளவுக்கு குறைவான பராமரிப்பு செலவீனத்தையும், சுற்றுச்சூழலுக்கு சிறந்தவையாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாக்லேவ் ரயிலின் சிக்னல் சிஸ்டம் முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும். எனவே, மிகவும் பாதுகாப்பான, நம்பகமான போக்குவரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு செலவு
இந்த மாக்லேவ் ரயில் வழித்தடத்தை கட்டமைப்பதற்கான செலவும் மிக அதிகம் என்பதெல்லாம் வெறும் கற்பனை. புல்லட் ரயிலைவிட குறைவானதாக இருக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வுப் பணிகள்
எனவே, இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து தருமாறு ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அமைப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.அடுத்த ஆறு மாதத்திற்குள் திட்ட வரையறையை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

பணிகள் தீவிரம்
இதனைத்தொடர்ந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் மத்திய ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விருப்ப அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

ட்விட்டரில் தகவல்
இந்த நிலையில், மாக்லேவ் ரயில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஸுரிச் நகரை சேர்ந்த சுவிஸ்ரேபிட் ஏஜி ரயில் நிறுவனத்துடன் மாக்லேவ் ரயில் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை பெல் நிறுவனம் நடத்தி வருகிறது.

கனவு நனவாகும்...
அந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் மாக்லேவ் ரயில் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் திட்டமிட்ட காலத்தில் மாக்லேவ் ரயிலை இந்தியாவில் இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








