மணல் மூட்டைகளுடன் 180 கிமீ வேகத்தில் பறந்த டால்கோ ரயில்... அதிகரிக்கும் ஆவல்!
இரு தசாப்தங்களுக்கு முன்பு வரை பயணங்கள் என்பதே பலருக்கும் அரிதானதாக இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை வெளியூர் செல்வதே அதிகபட்சம். ஆனால், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி பயிலும் சூழல்களுக்காக, இப்போது பயண தேவைகள் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
அதுவும், தற்போதைய சூழலில் வேலைவாய்ப்புகளுக்கும், கல்வி பயில்வதற்கும் இடம் பெயர்ந்து செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகியிருக்கிறது. பரந்து விரிந்த நம் தேசத்தில் இடம்பெயர்ந்த மக்களின் போக்குவரத்து தேவை உயர்ந்ததையடுத்து, அதிவேகமான போக்குவரத்து சாதனங்களின் தேவையும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்த நிலையில், அதிவேகமான அதே சமயத்தில் பாதுகாப்பான போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதற்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்தப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. புல்லட் ரயில் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு, உடனடி தீர்வாக தற்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து டால்கோ ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே துறை சில மாதங்களுக்கு முன் இறக்குமதி செய்து சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது.

மொத்தம் மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்ட இந்த சோதனை ஓட்டங்கள் தற்போது இரண்டாவது கட்டத்தின் நிறைவுப் பகுதியில் உள்ளது. சோதனை ஓட்டம் திருப்திகரமாக அமைந்ததா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

அதேவேளையில், இரண்டாவது கட்ட சோதனை ஓட்டங்கள் எதிர்பார்த்தபடியே, வெற்றிகரமாக இருந்ததாக ரயில்வே வட்டாரத்திலிருந்து கிடைத்திருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. கடந்த 21ந் தேதி டெல்லி- ஆக்ரா இடையில் அமைந்திருக்கும் மதுரா- பல்வால் இடையில் பயணிகள் எடைக்கு சமமான எடை கொண்ட மணல் மூட்டைகளை இருக்கைகளில் வைத்து சோதனை நடத்தப்பட்டது.

அந்த பாரத்துடன் இலக்கு வைக்கப்பட்ட மணிக்கு 180 கிமீ வேகத்தை டால்கோ ரயில் தொட்டு சரித்திர சாதனை படைத்தது. இதனை சரித்திர சாதனை என்பதற்கான காரணம், இதுவரை இந்திய ரயில் போக்குவரத்து வரலாற்றில் அதிகபட்ச வேகத்தில் இயக்கப்பட்ட சோதனை ஓட்டம் இதுவாகத்தான் கருதப்படுகிறது.

மேலும், மணிக்கு 180 கிமீ வேகத்தை டால்கோ ரயில் தொட்டு சாதனை படைத்திருப்பதன் மூலமாக, இந்திய ரயில் போக்குவரத்தில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாகவே கருதலாம். ஏனெனில், டால்கோ ரயில்களின் சராசரி வேகம் தற்போது இயக்கப்படும் சதாப்தி, ராஜ்தானி ரயில்களின் வேகத்தைவிட மிக அதிகமாக இருக்கும்.

இதன்மூலமாக, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும். உதாரணத்திற்கு, டெல்லி- மும்பை இடையில் தற்போதுள்ள 1384 கிமீ தூரத்தை மணிக்கு 80 கிமீ வேகம் என்ற சராசரி வேகத்தில் 17 மணி நேரம் பிடிக்கிறது. ஆனால், டால்கோ ரயில் சராசரியாக மணிக்கு 125 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்பதால், பயண நேரம் 12 மணிநேரமாக குறையும்.

இதுபோன்று, நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் இடையில் இந்த டால்கோ ரயிலை விரைவிலேயே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஏனெனில், ஏற்கனவே உள்ள தண்டவாளங்களிலேயை இந்த டால்கோ ரயிலை இயக்க முடியும். அதிக மாற்றங்களை செய்ய வேண்டியதில்லை என்பதுடன், அதிகப்படியான முதலீடுகளும் தேவைப்படாது.

அத்துடன், டால்கோ ரயில் பெட்டிகள் சிங்கிள் ஆக்சில் அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், வளைவுகளில் திருப்பும்போது வேகத்தை குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், சராசரி வேகம் மிக அதிகமாக இருக்கும். இதனால், பயண நேரம் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவசர கால பிரேக் பிடிக்கும்போது டால்கோ ரயில் பெட்டிகளின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்த வரும் 26ந் தேதி சோதனை நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் டெல்லி- மும்பை இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 220 கிமீ வேகம் வரை டால்கோ ரயிலை இயக்கி பார்க்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிபெறும்பட்சத்தில், டால்கோ ரயில்களை அதிக அளவில் இறக்குமதி செய்து நாட்டின் முக்கிய ரயில் வழித்தடங்களில் இயக்கிப் பார்க்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டிருக்கிறது. இதனால், விமானக் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் அதிவேகமான போக்குவரத்து வசதியை பெறும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

குறிப்பாக, தென்மாநிலங்களின் முக்கிய போக்குவரத்து கேந்திரமாக விளங்கும் சென்னையிலிருந்து டெல்லிக்கு டால்கோ ரயில் இயக்கப்படுமா என்ற ஆவலும் எழுந்துள்ளது. இதனால், தலைநகர் டெல்லியை தென்மாநில மக்கள் எளிதாக எட்டிப்பிடிக்கும் வாய்ப்பை பெற முடியும்.


Click it and Unblock the Notifications








