டால்கோ ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கியது... மணிக்கு 220 கிமீ வேகம் வரை இயக்க வாய்ப்பு!
ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டால்கோ ரயில் பெட்டிகளின் சோதனை ஓட்டம் நேற்று முறைப்படி துவங்கப்பட்டது. பரேலி- மொராதாபாத் இடையிலான இந்த சோதனை ஓட்டம் இரு மார்க்கத்தில் 5 மணி நேரம் நீடித்தது. நேற்று காலை பரெலி ரயில் நிலையத்தில் 9.05 மணிக்கு புறப்பட்ட டால்கோ ரயில் 10.15 மணிக்கு மொராதாபாத் ரயில் நிலையத்தை அடைந்தது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது 85 கிமீ வேகம் முதல் 115 கிமீ வேகம் வரை ரயில் இயக்கப்பட்டது. மணிக்கு சராசரியாக 90 கிமீ வேகத்தில் ரயில் சென்றுள்ளது. இது தற்போதைய ராஜ்தானி ரயில்களின் சராசரி வேகத்தை விட அதிகம். இந்தநிலையில், டால்கோ ரயில் சோதனை ஓட்டம் பற்றி செய்தி நிறுவனங்களிடமிருந்து கிடைத்திருக்கும் விரிவானத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் கட்ட சோதனை ஓட்டம்
முதல்கட்டமாக இரு வாரங்களுக்கு பரேலி - மொராதாபாத் இடையே டால்கோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்படுகிறது. மணிக்கு 115 கிமீ வேகம் வரை ரயில் செலுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் 12 வரை இந்த சோதனை நடைபெறும்.

இரண்டாவது கட்ட சோதனை
டெல்லி- ஆக்ரா இடையில் அமைந்திருக்கும் பல்வல்- மதுரா இடையில் இரண்டாம் கட்ட சோதனைகள் நடைபெற உள்ளது. மணிக்கு 180 கிமீ வேகம் வரை டால்கோ ரயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனை 40 நாட்கள் நீடிக்கும். மணிக்கு 10 கிமீ வேகம் தினசரி அதிகரிக்கப்பட்டு அதிகபட்ச வேகம் எட்டிப்பிடிக்கப்படும்.

மூன்றாவது கட்ட சோதனை
டெல்லி- மும்பை இடையில் முதல் டால்கோ ரயிலை இயக்கும் முயற்சியாகவே இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த வழித்தடத்தில் மூன்றாவது கட்டமாக மணிக்கு 200 கிமீ வேகம் வரை டால்கோ ரயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனை இரண்டு வாரங்கள் நீடிக்கும்.

பெட்டிகள் எண்ணிக்கை
தற்போது டால்கோ ரயில் 9 பெட்டிகளை கொண்டுள்ளது. இரண்டு உயர் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இருக்கை வசதி பெட்டிகள், ஒரு உணவகம், ஒரு ஜெனரேட்டர் பெட்டி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கான பெட்டி உள்பட 9 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆய்வு பெட்டியில் இந்தியன் ரயில்வே மற்றும் டால்கோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் பயணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

எஞ்சின்
டால்கோ ரயிலில் WDG-3D மற்றும் WDP-4 ஆகிய இரு டீசல் எஞ்சின்கள் இருபுறத்திலும் இணைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. அனைத்து ரயில் எஞ்சின்களும் சிறப்பாக பொருந்துகிறதா என்பதையும், ரயில் எஞ்சின்களின் செயல்திறன், எரிபொருள் சிக்கனத் திறனும் பார்க்கப்படுகிறது. அடுத்து WAP-5 மின்சார ரயில் எஞ்சினும் பயன்படுத்தப்பட உள்ளது.

மணல் மூட்டை
ரயில் பெட்டிகளை காலியாக சோதனை செய்யப்படுவதுடன், பயணிகளின் எடைக்கு இணையாக 324 மணல் மூட்டைகளை அடுக்கியும் சோதனை செய்யப்படுகிறது. இதனால், இந்திய தண்டவாள அமைப்பில் டால்கோ ரயில் பெட்டிகளின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுவதற்கு ஏதுவாகி இருக்கிறது.

தொழில்நுட்ப சிறப்புகள்
இந்த ரயில் பெட்டிகள் வளைவுகளிலும் வேகத்தை குறைக்காமல் செல்லும் வகையிலான ஆக்சில்களை கொண்டிருக்கிறது. மேலும், கார்களில் இருப்பது போன்று பெட்டிகள் கவிழாமல் நிலைத்தன்மையுடன் செல்லும் விசேஷ தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கின்றன.

கூடுதல் பெட்டிகள்
முதல்கட்ட சோதனைகள் முடிவடைந்தவுடன், அடுத்த மாத இறுதியில் மேலும் 30 டால்கோ ரயில் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை பல்வேறு முக்கிய ரயில் வழித்தடங்களில் இயக்கி சோதனை செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

விலை குறைவு
இந்தியாவில் தயாராகும் LHB உயர்வகை ரயில் பெட்டிகளை விட இந்த டால்கோ ரயில் பெட்டிகள் ஒரு கோடி ரூபாய் விலை குறைவு என்பதையும் கவனிக்க வேண்டிய விஷயமாகியிருக்கிறது. அத்துடன், 30 சதவீதம் வரை மின்சார சிக்கனத்தை கொண்டது.

ரொம்ப ஸ்மூத்
இந்த ரயிலில் பயணித்து ஆய்வு நடத்தி வரும் குழுவில் இடம்பெற்றிருக்கும் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், " சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பதை உடனடியாக கூற இயலாது. முதல்கட்ட சோதனை முடிவில்தான் தெரிவிக்க இயலும். ஆனால், இந்த பெட்டிகள் மிகவும் ஸ்மூத்தான பயணத்தை வழங்குகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.

அதிகபட்ச வேகம்
அனைத்து சோதனை ஓட்டங்களும் திருப்திகரமாக அமைந்தால், டெல்லி- மும்பை வழித்தடத்தில் டால்கோ ரயில் விரைவிலேயே சேவையை துவங்கும் வாய்ப்புள்ளது. தொழில்நுட்ப ரீதியில் இந்திய தண்டவாளங்களில் டால்கோ ரயில் சிறப்பாக ஓடினால், எதிர்காலத்தில் அதிகபட்சமாக மணிக்கு 220 கிமீ வேகம் வரை இயக்கும் வாய்ப்பு உள்ளது.

செமி புல்லட் ரயில்
2023ம் ஆண்டில் மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருக்கும் நிலையில், வெகு விரைவில் இந்த டால்கோ செமி- புல்லட் ரயில் இந்திய வழித்தடங்களை ஆர்ப்பரித்து செல்லத் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








