இந்த ரயில் இயங்க தலைக்கு மேல எலெக்ட்ரிக் லைன் தேவைப்படாது.. ஹைட்ரஜன் பவர்டு ரயில் ஜனவரியில் ஓட தொடங்கிரும்!
ஒரு காலத்தில் டீசல் எஞ்சின் மற்றும் கரி எஞ்சினைக் கொண்ட ரயில்களை இயக்கி வந்த இந்தியன் ரயில்வேஸ், தற்போது மின்சார ரயில்களின் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றது. இதன் விளைவாக தற்போது நாட்டில் டீசல் மற்றும் கரி எஞ்சினில் இயங்கும் ரயில்களின் இருப்பு மிகப் பெரிய அளவில் குறைந்துக் காணப்படுகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அவற்றின் பயன்பாட்டு நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காணப்படுகின்றது. இந்த நிலையே விரைவில் மின்சாரத்தில் இயங்கும் ரயில்களுக்கும் ஏற்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஆமாங்க, மின்சார வாகனங்களின் இருப்பும் இல்லாமல் போவதற்கான சூழலே தற்போது உருவாக தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியன் ரயில்வேஸ் ஓர் தனித்துவமான ரயிலின் சோதனையோட்டத்தை நாட்டில் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்தான் அது ஆகும்.

இந்த ரயிலின் சோதனையோட்டத்தையே விரைவில் நாட்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கின்றது, இந்தியன் ரயில்வேஸ். தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலின் சோதனையோட்டம் தொடங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்காக ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலின் முன் மாதிரி மாடல் தயாரிக்கும் பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் என ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன்-க்கு தெரிவித்திருகின்றார். இதைத்தொடர்ந்து, அந்த ரயில் அடுத்த சில வாரங்களிலேயே, அதாவது, ஜனவரி மாதத்திற்குள் சோதனையோட்டத்தை மேற்கொள்ள தொடங்கிவிடும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
முதல் கட்டமாக டீசல் லோக்கோமோட்டிவைக் கொண்ட ரயிலையே ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலாக மாற்றி பயன்படுத்த இருக்கின்றனர். சமீபத்தில் 1200 KW திறன் கொண்ட டிஇஎம்யூ (Diesel Electric Multiple Unit) ரயில், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் டிபிஆர்எஸ் (Distributed Power Rolling Stock) ரயிலாக மாற்றுவதற்கான டெண்டர்கள் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் அடிப்படையிலேயே டீசல் ரயில்கள் சில ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள், ஹைட்ரஜனை மின்சார ஆற்றலாக மாற்றி அதன் வாயிலாகவே அவை இயங்கும். இந்த செயல்முறையில் புகை வெளியேற்றம் என்பதே இருக்காது. உதாரணமாக, டீசல் எஞ்சின் கொண்ட ரயில் டீசலை ஆற்றலாக மாற்ற அதை எரிக்கும்.
அப்போது மிகப் பெரிய அளவில் கார்பன் வெளிப்பாடு ஏற்படும். அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைதவிர்க்கவும் ஹைட்ரஜன் ரயில் பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது. ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை ஆற்றலாக மாற்றும்போது நீராவியே வெளியேறும். இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தவகை தொழில்நுட்பம் ஏற்கனவே கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், உலக நாடுகள் சிலவற்றில் பேருந்துகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இந்தியாவில் ரயில்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் சோதனையோட்டமே அடுத்த ஆண்டு ஜனவரில் தொடங்கப்பட உள்ளது.
இந்த சோதனையோட்டம் வெற்றியடையும்பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து டீசல் லோக்கோமோட்டீவ்களும் ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், மின்சார ரயில்களுக்கு பதிலாகவும் ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இதன் பாதுகாப்பு திறன், தடையில்லாமல் ஹைட்ரஜன் ரயிலை இயக்க முடியுமா என்பது போன்ற பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
பாதுகாப்பு போன்ற பிற முக்கிய சான்றிதழ்களை இது பெறும் எனில் இந்தியன் இரயில்வே ஆறு பெட்டிகளைக் கொண்ட 35 ரயில்களை முதலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த ரயில்கள் வாயிலாக ரயில்வே துறையை நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு எனும் பாதையை நோக்கி நகர்த்தவும் இந்தியன் ரயில்வேஸ் நோக்கமாக கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் ரயில்வேஸ் தற்போது பலமடங்கு அட்வான்ஸ்டானதாக மாறிவிட்டது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கின்றன. வந்த பாரத்தின் ஸ்லீப்பர் வெர்ஷனும் சமீபத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக இதன் மினி வெர்ஷனான வந்தே மெட்ரோவும் விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்தியாவில் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் ரயில்களும் பயன்பாட்டிற்கு வரும் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








