பாதி படம் முடியறதுக்குள்ள சென்னை-பெங்களுர் போயிரலாம்! புல்லட் ரயில்களை தூக்கி சாப்பிட போகும் இந்திய ரயில்வே!
மேக் இன் இந்தியா (Make In India) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்களுக்கு (Vande Bharat Trains) பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொழில்நுட்ப விஷயங்களில் மேம்பட்ட ரயில்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்ற இந்தியாவின் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இருக்கின்றன. எனவே டிக்கெட் கட்டணம் (Ticket Fare) சற்று அதிகம் என்றாலும் கூட, இந்திய மக்கள் வந்தே பாரத் ரயில்களில் ஆர்வமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை இந்தியாவில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களும் தற்போது மிகவும் தீவிரமாக வகுக்கப்பட்டு வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவின் வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அவை பேசியுள்ளன. எனவே கூடிய விரைவில் தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகிய பிராந்தியங்களில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்திய ரயில்வே துறையின் முன்னேற்றம் இத்துடன் நிற்க போவதில்லை. இந்தியா கூடிய விரைவில் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளது. ஆம், மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடிய அதிவேக ரயிலை (High-speed Train) இந்தியா தயாரிக்கவுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnaw) உறுதி செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் (Lok Sabha) எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கிய எழுத்துபூர்வமான பதில் மூலமாகதான் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. சென்னை ஐசிஎஃப் (ICF - Integral Coach Factory) மற்றும் பிஇஎம்எல் (BEML) நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், இந்தியாவின் அதிவேக ரயில் தயாரிக்கப்படவுள்ளது.
சென்னை ஐசிஎஃப் பற்றி நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். ஆனால் பிஇஎம்எல் நிறுவனத்தை பற்றி ஒரு சிலருக்கு தெரியாது. அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். Bharat Earth Movers Limited என்பதன் சுருக்கம்தான் BEML. இது ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும்.
ரயில் பெட்டிகள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றை எல்லாம் பிஇஎம்எல் நிறுவனம் தயாரித்து வருகிறது. அத்துடன் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளுக்கு தேவைப்படும் கனரக உபகரணங்களையும் கூட பிஇஎம்எல் நிறுவனம் தயாரித்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
எனவே சென்னை ஐசிஎஃப் உடன் இணைந்து பிஇஎம்எல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தியாவின் அதிவேக ரயிலும் உலகின் கவனத்தை ஈர்க்கும் என உறுதியாக நம்பலாம். இந்த அதிவேக ரயிலின் ஒரு பெட்டியை தயாரிக்கவே சுமாராக 28 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உலகில் உள்ள மற்ற அதிவேக ரயில்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் அதிவேக ரயிலுக்காக உற்பத்தி செலவு மிகவும் குறைவு என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த அதிவேக ரயில்களை உருவாக்குவது என்பது சிக்கலான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா உருவாக்கவுள்ள அதிவேக ரயில் காற்றை கிழித்து கொண்டு பறக்கும் வகையிலான ஏரோடைனமிக் வெளிப்புறத்தை கொண்டிருக்கும். அத்துடன் ஆட்டோமேட்டிக் டோர்கள், க்ளைமேட் கண்ட்ரோலுக்காக அதிநவீன ஹெச்விஏசி (HVAC - Heating, Ventilation, Air Conditioning) சிஸ்டம்ஸ், சிசிடிவி கேமராக்கள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் ஆகியவற்றையும் இந்த ரயில்கள் கொண்டிருக்கும்.
பயணிகளின் சௌகரியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கூடிய அதிநவீன வசதிகள் அனைத்தையும் இந்த ரயில்கள் பெற்றிருக்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். விரிவான டிசைன் உருவாக்கப்பட்டவுடன், இந்த ரயில்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? என்பது முடிவு செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் முன்னணி நகரங்களான சென்னை-பெங்களூர் இடையேயான தொலைவு சுமார் 350 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டால், 350 கிலோ மீட்டர் தொலைவை, சுமார் 1.30 மணி நேரத்திலேயே கடந்து விட முடியும். எனவே இந்திய ரயில்வே துறையின் மைல்கல்லாக இந்த அதிவேக ரயில்கள் திகழ போகிறது என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








