டீசல் எஞ்சின்களுக்கு குட்பை... முழுமையாக மின்சார ரயில் எஞ்சின்களுக்கு மாறும் இந்திய ரயில்வேத் துறை!
ரயில் எஞ்சின்கள் மூலமாக ஏற்படும் மாசு உமிழ்வை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் விதத்தில், துளியும் மாசு உமிழ்வு இல்லாத நிலைக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளில் இந்திய ரயில்வேத் துறை ஈடுபட்டுள்ளது.

வாகனங்கள், ரயில்கள், விமானங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக புதிய எரிபொருள் நுட்பங்களுக்கு மாறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

அதன்படி, மின்சார வாகனங்கள், ரயில் எஞ்சின்கள் மற்றும் விமானங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் இந்திய ரயில்வேத் துறை வியக்க வைக்கும் அளவுக்கான திட்டடங்களுடன் வேகமாக மாசு உமிழ்வு பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதாவது, வரும் 2023ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட உள்ளன. இதனால், அதிக புகையை வெளியிடும் டீசல் எஞ்சின்கள் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டு, முழுவதுமாக மின்சார ரயில் எஞ்சின்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்து உலகிலேயே மிகப்பெரிய ரயில் பாதை கட்டமைப்பை இந்தியா பெற்றிருக்கிறது. 67,368 கிமீ தூரத்திற்கான ரயில் பாதையை கொண்டிருக்கும் இந்திய ரயில்வேத் துறையில் 7,300 ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த மிகப்பெரிய ரயில்பாதை கட்டமைப்பை முழுவதுமாக மின் மயமாக்கும் திட்டத்தை இந்திய ரயில்வேத் துறை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நிதி அயோக் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்களின்படி, 2014ம் ஆண்டு தரவுகளில் ஆண்டுக்கு 6.84 டன் அளவுக்கு கார்பன் புகை இந்திய ரயில்வேத் துறை கட்டமைப்பால் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து ரயில் பாதைகளும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டு, டீசல் எஞ்சின்கள் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்," என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முதல் டீசல் பயன்பாடு இல்லா ரயில் பாதை கட்டமைப்பாகவும் இந்தியா மாற இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த அதிதீவிர முயற்சிகளின் மூலமாக உலகின் முதல் பசுமை ரயில்வேத் துறை என்ற பெருமையை இந்தியா பெற இருக்கிறது. மின்சார ரயில் எஞ்சின்களுக்கு அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் பெறுவதையும் அறவே ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறைக்கப்படும்.

மேலும், சூரிய மின்சக்தி மூலமாக மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளும் மறுபுறத்தில் நடந்து வருவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது நிச்சயம் இந்திய ரயில்வேத் துறையின் மாபெரும் சாதனையாகவே இருக்கும்.

டீசல் எஞ்சின்களைவிட மின்சார எஞ்சின்கள் செயல்திறனிலும் சிறப்பாக இருக்கும். இதனால், பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவு குறைவதற்கான வாய்ப்புகளும் உண்டு.


Click it and Unblock the Notifications








