லண்டன் டு டெல்லி... ஹயபுசாவில் ஓர் அசுர பயணத்திற்கு இளைஞர் ஆயத்தம்
லண்டனில் வசித்து வருபவர் இந்தியரான சுஷாந்த் ஓர் அசகாய பைக் பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ஆம், இங்கிலாந்திலிருந்து தனது ஹயபுசா பைக்கில் குறுகிய காலத்தில் மிக விரைவாக இந்தியாவை அடைவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
வரும் 25ந் தேதி தனது பைக் பயணத்தை இங்கிலாந்தில் துவங்கும் சுஷாந்த் அடுத்த 15 நாட்களில் இந்தியாவை அடைந்துவிட திட்டமிட்டுள்ளார். பிரான்ஸ், துருக்கி, ஈரான் வழியாக பைக்கில் பயணிக்க இருக்கும் அவர் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை அடைய திட்டமிட்டுள்ளார்.

ஒருவேளை, பாகிஸ்தானில் நுழைவதற்கு உடனடியாக விசா வழங்கப்படாவிட்டால், துபாய் வழியாக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். ஆனால், துபாய் வழியாக வருவதற்கு கூடுதல் காலம் செலவழியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முடிந்தவரை குறுகிய நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்யவும் சுஷாந்த் திட்டமிட்டுள்ளார். ஐரோப்பாவில் சில நாடுகளில் பயணித்திருப்பதால், சாலை விதிகள் மற்றும் வேகக்கட்டுப்பாடுகள் குறித்து ஓரளவு தெரியும் என்பதால் தனது பயணத்தில் அதிக பிரச்னைகள் இருக்காது என்று கருதுகிறார்.
அடுத்த மாதம் 23ந் தேதி லண்டன் திரும்புவதற்கு சுஷாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனால், தனது ஹயபுசா பைக்கை இங்கே விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளார். மேலும், இந்த பைக்கை லண்டன் எடுத்துச் செல்வதற்கு முன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
சுஷாந்த் பயணம் சிறக்க எமது வாழ்த்துகள்!


Click it and Unblock the Notifications








