உலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மிகவும் அபாயகரமான இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அதனை உறுதி செய்கின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்கள் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சாலைகளில் ஏராளமான ஆபத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அந்த ஆபத்துக்களை அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நீங்களும் சாலை விபத்தில் சிக்க நேரிடும். எனவே இந்திய சாலைகளில் உள்ள ஆபத்துக்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு பலன் அளிக்கும் என நம்புகிறோம்.

ராங் சைடு ரைடர்கள்:
எதையும் குறுக்கு வழியில் செய்யும் மக்களை அதிகளவில் கொண்ட நாட்டில் நாம் வசித்து வருகிறோம். இதன் எதிரொலியாக ராங் சைடு பயணத்தை கருதலாம். தொலைவு கொஞ்சம் குறையும் என்பதற்காக ராங் சைடில் பயணிக்கும் பலர் இந்தியாவில் இருக்கின்றனர். ராங் சைடில் பயணிப்பதால் போக்குவரத்தில் குழப்பம் உண்டாகி நெரிசல் ஏற்படும். அத்துடன் சாலை விபத்துக்களுக்கும் இது வழிவகுக்கலாம்.

கால்நடைகள்:
இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுதலாக இருப்பது கால்நடைகள். இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும், ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதை காண முடியும். கால்நடைகள் காரணமாகவும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

இரவு நேரங்களிலும், பனிக்காலங்களிலும்தான் கால்நடைகளால் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இரவு நேரங்களிலும், பனி படர்ந்த சூழ்நிலைகளிலும் விஸிபிலிட்டி மிகவும் குறைவாக இருக்கும். எனவே அடுத்த முறை நீங்கள் வாகனம் ஓட்டும்போது கால்நடைகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்.

பிரேக் டவுன் ஆன வாகனங்கள்:
பிரேக் டவுன் ஆன வாகனங்களை சாலையோரத்தில் பாதுகாப்பாக பார்க்கிங் செய்ய வேண்டும். அத்துடன் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். ஆனால் யாரும் இதனை முறையாக பின்பற்றுவது கிடையாது. பிரேக் டவுன் ஆன வாகனங்களை ஒரு சிலர் சாலையோரத்தில் அப்படியே பார்க்கிங் செய்து விடுகின்றனர்.

மிக வேகமாக சென்று கொண்டிருக்கும்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பிரேக் டவுன் ஆன வாகனங்களை கவனிப்பது மிகவும் கடினம். அப்படியே கவனித்தாலும் கூட உடனடியாக வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து வாகனத்தை நிறுத்த முடியாது. இதன் காரணமாகவும் இந்தியாவில் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன.

தேவையில்லாத பொருட்கள்:
உடைந்து போன பேரிகார்டு, கல் மற்றும் குப்பை போன்ற தேவையில்லாத பொருட்கள் இந்திய சாலைகளில் நிறையவே கிடக்கும். இவைகள் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்த சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே சாலையில் பயணிக்கும்போது தேவையில்லாத பொருட்கள் ஏதேனும் கிடக்கிறதா? என பார்த்து கவனமாக செல்லுங்கள்.

குழிகள்:
இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாகதான் காணப்படுகின்றன. இந்தியாவில் மழை காலம் வந்து விட்டால் போதும். பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிடும். நம் நாட்டின் சாலைகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னையே குழிகள்தான். மழை காரணமாகவும் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்களின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாகவும் அவை ஏற்படுகின்றன.

குண்டும், குழியுமான சாலைகளில் பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருங்கள். கூடுமான வரை குறைந்த வேகத்தில் செல்லலாம். இதுபோன்ற சாலைகளில் நிகழும் விபத்துக்கள் உயிரிழப்பை ஏற்படுத்த கூடும். சில சமயங்களில் படுகாயம் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








