நாசாவில் இடம் கிடைக்கவில்லை!! இந்திய பெண் அமெரிக்காவில் செய்யும் வேலை - டாலர்களில் வருமானத்தை அள்ளுகிறார்!
இயற்பியல் துறையில் தோல்வியடைந்ததால் நாசா (NASA)-இல் சேர முடியாமல் போன இந்திய பெண் ஒருவர் தற்போது பறக்கும் படகுகளை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார். யார் அந்த இந்திய பெண்மணி? அவர் உருவாக்கும் பறக்கும் படகுகளின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி பார்க்கலாம், வாங்க.
படிப்பில் தோல்வியுற்ற பலர் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சம்பவங்களை தினந்தோறும் வாழ்வில் பார்த்து வருகிறோம். சிலர், குறிப்பிட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாமல் இருந்திருப்பார்கள், ஆனால் வேறொரு பாடப்பிரிவில் சிறந்து விளங்குவார்கள். ஆதலால், பாடத் தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் என சொல்வது முற்றிலும் அபத்தமானது.

அவ்வாறு, நாசாவில் சேரும் முயற்சியின்போது இயற்பியல் பாடப்பிரிவில் தோல்வியுற்ற இந்திய பெண்மணி ஒருவர் பறக்கும் படகுகளை உருவாக்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார். இந்த இந்திய பெண்ணின் பெயர் சம்ப்ரிதி பட்டாச்சார்ய்யா. கொல்கத்தாவை சேர்ந்தவரான இவர் சிறு வயதில் இருந்தே சில பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இருப்பினும் வளர்ந்த பின், நாசாவில் சேர்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார், சம்ப்ரிதி.
"உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது கணித பாடத்தில் நான் சிறந்தவள் கிடையாது. நான் இல்லத்தரசியாகவோ அல்லது சிறிய வேலைகளில் பணியாற்றுவதற்கோ தான் ஏற்றவள் என எனது ஆசிரியர் நினைத்தார்" என சமீபத்திய பேட்டி ஒன்றில் சம்ப்ரிதி பட்டாச்சார்ய்யா தெரிவித்துள்ளார். இந்த பெண்ணுக்கு எதிர்காலம் எவ்வாறு இருக்க போகிறது என்பதை அவரது ஆசிரியரால் கணிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

20 வயதில், சம்ப்ரிதி தனது கனவை நோக்கி ஓட ஆரம்பித்தார். அதாவது, பெரிய நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்வதுதான் அந்த கனவாகும். அதன்படி, சுமார் 540 கம்பெனிகளில் பயிற்சிக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவற்றுள் வெறும் 4 கம்பெனிகள் மட்டுமே சம்ப்ரிதியின் விண்ணப்பத்திற்கு செவி சாய்த்தன. அந்த 4 கம்பெனிகளுள் ஃபெர்மிலேப் என்ற கம்பெனியின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் துகள் அறிவியல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
சம்ப்ரிதி பட்டாச்சார்ய்யாவுக்கு சிறு வயதில் கணிதம் பெரியதாக வரவில்லை என்றாலும், அறிவியல் பாடப்பிரிவுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கியுள்ளார். சம்ப்ரிதியின் அறிவியல் ஆர்வத்துக்கு ஃபெர்மிலேப் சரியான பயிற்சிக்கூடமாகவும், அவரது எதிர்காலத்திற்கு அடித்தளமாகவும் அமைந்தது. அங்கு கிடைத்த ஊக்கத்திலும், பயிற்சியிலும் நாசாவில் சேரும் ஆசை சம்ப்ரிதியை ஆட்கொண்டது.

ஒஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் மற்றும் எம்ஐடி-இல் முனைவர் பட்டம் ஆகியவை சம்ப்ரிதியை நாசாவில் பயிற்சி மாணவி ஆக்கியது. இருப்பினும், நாசாவில் சம்ப்ரிதியால் இணைய முடியவில்லை. இதனை அடுத்து, சான் பிரான்சிஸ்கோவுக்கு இடம்பெயர்ந்த சம்ப்ரிதி அங்கு தனக்கென ஒரு பிரத்யேக குழுவை சேர்த்தார். அத்துடன், அவர்கள் மூலமாக 12 மில்லியன் டாலர்கள் நிதியையும் திரட்டினார்.
சம்ப்ரிதி குழுவின் முக்கிய நோக்கம், கடல்சார் தொழிலில் புரட்சியை ஏற்படுத்துவதாகும். இவர்கள் உருவாக்கிய நிறுவனம் தான் நேவியர். அமெரிக்காவின் முதல் முழு எலக்ட்ரிக் ஹைட்ரோஃபோயிலிங் படகு தயாரிப்பு நிறுவனம். நீர் அலைகளால் வேகத்தை இழக்காதவாறு, படகுகள் நீரின் குறிப்பிட்ட அடி உயரத்தில் இயங்கும் வகையில் இறக்கைகள் உடன் நேவியர் நிறுவனத்தில் உருவாக்கப்படுகின்றன.

இதன் மூலமாக படகின் வேகம் அதிகரிப்பது மட்டுமின்றி, ஆற்றல் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அத்துடன், இந்த முறையில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் படகுகள் மிகவும் அமைதியாக செயல்படும் என்கிறது நேவியர் நிறுவனம். இந்த அமெரிக்கன் எலக்ட்ரிக் ஹைட்ரோஃபோயிலிங் படகு தயாரிப்பு நிறுவனத்தின் தரமான தயாரிப்பாக நேவியர் 30 விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொல்கத்தாவில் பிறந்து, அமெரிக்காவில் கொடி நாட்டி வரும் சம்ப்ரிதி பட்டாச்சார்ய்யாவின் கதை உண்மையில் நமக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது, ஒரு பாடம் நமக்கு புரியவில்லை என்றால், புரிகின்ற வேறொரு பாடத்தில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அனைத்து விதமான பாடங்களிலும் முனைவர் பட்டத்தை பெற வேண்டும் என்றில்லை.


Click it and Unblock the Notifications









