மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில் சேவை நாளை துவங்குகிறது!
டெல்லி- ஆக்ரா இடையே இந்தியாவின் அதிவேக ரயில் நாளை முதல் சேவையை துவங்குகிறது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்பட இருக்கும் இந்த ரயிலை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது அலுவலகத்திலிருந்து ரிமோட் கன்ட்ரோல் முறையில் இந்த ரயில் சேவையை துவங்கி வைக்கிறார்.
இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அத்துடன், அடுத்ததாக சென்னை- பெங்களூர்- மைசூர் உள்பட நாட்டின் முக்கிய ரயில் வழித்தடங்களில் இந்த அதிவேக ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதுகுறித்த தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பில் இணைத்திருக்கிறோம்.

சேவை துவக்கம்
டெல்லி முக்கிய சந்திப்புக்கு பதிலாக நாளை நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், டெல்லியின் முக்கிய சந்திப்பிலிருந்து நிஜாமுதீன் வரையிலான வழித்தடத்தில் அதிக சிக்னல்கள் இருப்பதால், பயண நேரம் அதிகரிக்கும் என்ற நிலை இருப்பதால், இந்த ரயில் தற்போது நிஜாமுதீனிலிருந்து ஆக்ரா வரை இயக்கப்பட உள்ளது.

கால அட்டவணை
காலை 8.10 மணிக்கு டெல்லியிலுள்ள நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து கட்டிமான் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு, 9.50 மணிக்கு ஆக்ராவை கட்டிமான் எக்ஸ்பிரஸ் சென்றடையும். ஆனால், நாளை துவக்க நாள் என்பதால், காலை 10 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு பிற்பகல் 11.40 மணிக்கு ஆக்ராவை சென்றடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயண நேரம்
நிஜாமுதீன்- ஆக்ரா இடையிலான 195 கிமீ தூரத்தை 100 நிமிடங்களில் கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றடையும். ஏற்கனவே, இந்த தூரத்தை 90 நிமிடங்களில் கடப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி, 100 நிமிடங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இதே வழித்தடத்தில் இயக்கப்படும் சாதாரண பயணிகள் ரயில் இந்த தூரத்தை 7 மணி நேரத்தில் கடக்கிறது.

பெட்டிகள்
கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் 12 ஏசி ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நவீன நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு பெட்டியும் ரூ.2.5 கோடி மதிப்புடையது.

வசதிகள்
இலவச வைஃபை இணைய தொடர்பு வசதி, தானியங்கி கதவுகள், அவசர கால பிரேக்குகள், மின்னணு அறிவிப்பு பலகைகள், சொகுசான இருக்கைகள் என பல்வேறு வசதிகளை பயணிகள் பெற முடியும். மேலும், விமானங்களை போன்று, ஒவ்வொரு பெட்டியிலும் பணிப்பெண்கள் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயணக் கட்டணம்
இந்த ரயிலில் சேர் காருக்கு ரூ.690-ம், உயர் வகுப்புக்கு ரூ.1,365-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவே சதாப்தி ரயிலில் சேர் காருக்கு ரூ.540-ம், உயர் வகுப்புக்கு ரூ.1,040-ம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பயணிகள் ரயிலில் ரூ.45 மட்டுமே கட்டணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேவை நாட்கள்
ஆக்ராவிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கருதியே இந்த ரயில் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. எனவே, வெள்ளிக்கிழமை தாஜ்மஹால் மூடப்பட்டிருக்கும் என்பதால், அன்றைய தினம் மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது. மற்ற அனைத்து தினங்களிலும் இயக்கப்படும்.

எஞ்சின்
இந்தியாவின் அதிவேக ரயில் எஞ்சின்களில் ஒன்றான WAP-5 மின்சார எஞ்சின்தான் கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் 5,400 குதிரை சக்தி திறன் கொண்டது. மணிக்கு 160 கிமீ வேகம் வரை ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்லும். சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 184 கிமீ வேகத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

இதர வழித்தடங்கள்
டெல்லி- ஆக்ரா இடையே நாளை அதிவேக ரயில் சேவை துவங்கப்பட இருக்கும் நிலையில், நாட்டின் பல முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 160 கிமீ வேகம் வரையில் செல்லும் அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டிருக்கிறது.

வழித்தடங்கள் விபரம்
சென்னை- ஹைதராபாத், சென்னை- பெங்களூர்- மைசூர், டெல்லி- சண்டிகர், மும்பை- ஆமதாபாத், மும்பை- கோவா, நாக்பூர்- ராய்பூர்- பிலாஸ்பூர், நாக்பூர்- செகந்திராபாத், டெல்லி- கான்பூர் ஆகிய வழித்தடங்களில் கட்டிமான் எக்ஸ்பிரஸ் போன்று மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

மணிக்கு 200 கிமீ வேகத்தில் சென்னை- மும்பை இடையே அதிவேக ரயில் இயக்க திட்டம்!


Click it and Unblock the Notifications