அடக்கொடுமையே... 28 வருஷத்துல இரண்டே நிமிடம் வேகம் கூடியிருக்கும் இந்தியாவின் அதிவேக ரயில்!
கடந்த ஆண்டு இந்தியாவின் அதிவேக ரயில் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. டெல்லி- ஆக்ரா இடையில் இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கட்டிமான் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரயிலின் சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த சோதனையின்போது இந்த ரயிலின் வேகம் பற்றிய ஒரு உண்மை வெளிவந்துள்ளது.

அதிவேக ரயில்
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி- ஜான்சி இடையில் நாட்டின் முதல் சதாப்தி ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூறாவது பிறந்தநாளையொட்டி அந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

சதாப்தி வேகம்
டெல்லி- ஜான்சி இடையிலான சதாப்தி ரயி்ல மணிக்கு 150 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலை மணிக்கு 155 கிமீ வேகம் வரை இயக்குவதற்கு ரயில்வே துறை அனுமதித்துள்ளது.

பழைய ஃபைல்
இந்தியாவின் முதல் சதாப்தி ரயில், டெல்லி- ஆக்ரா இடையிலான தூரத்தை 115 நிமிடங்களில் கடந்துவிடும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது பழைய பதிவேடுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டிமான் பயண நேரம்
சமீபத்தில் நடந்த சோதனையின்போது டெல்லி- ஆக்ரா இடையிலான பயண தூரத்தை 113 நிமிடங்களில் கட்டிமான் எக்ஸ்பிரஸ் கடந்துள்ளது. அதாவது, 28 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட முதல் சதாப்தி ரயிலைவிட வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே குறைவான பயண நேரத்தில் டெல்லி- ஆக்ராவை கடக்கிறது.

அடக்கொடுமையே...
28 ஆண்டுகளில் எவ்வளவொ தொழில்நுட்ப மாற்றங்களை சந்தித்துவிட்ட நிலையில், இந்தியாவின் அதிவேக ரயில் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே குறைவான நேரத்தில் டெல்லி- ஆக்ராவை கடப்பது அதிருப்தியூட்டும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

பயண நேர இலக்கு
கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது. மேலும், 90 நிமிடங்களில் டெல்லி- ஆக்ராவை கடக்க இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், சமீபத்திய சோதனையில் 113 நிமிடங்களை எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், 105 நிமிடங்களில் கடக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம்
டெல்லி- ஆக்ரா இடையிலான வழித்தடத்தில் கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்காக தடுப்பு வேலிகள், தண்டவாளத்தை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசேஷ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், டெல்லி- ஆக்ரா இடையே 19 இடங்கள் அபாயகரமான பகுதியாக கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த இடங்களில் 60 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும் என்பதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கட்டமைப்பு
டெல்லி- பல்வால் இடையிலான 58 கிமீ தூரத்திற்கு மட்டும் 60 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 15 கோடி ரூபாயை செலவிட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இருப்பினும் 90 நிமிடங்கள் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

அதிகாரி விளக்கம்
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார், "டெல்லியிலிருந்து ஆக்ராவை 90 நிமிடத்தில் அடைந்துவிட வேண்டும் என்ற இலக்கு எளிதானதுதான். ஆனால், ஏற்கனவே இருக்கும் அதே கட்டமைப்பை வைத்துக் கொண்டு அதிவேகத்தில் ரயிலை இயக்குவதில் சவால்கள் உள்ளன. மேலும், பல இடங்களில் வேக வரம்பு பிரச்னை இருக்கிறது. அதேநேரத்தில், பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள வேண்டும்," என்று கூறினார்.

கட்டணம் அதிகம்
சதாப்தியை விட கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்டணம் அதிகம். இருந்தும் பயண நேரம் வெறும் 2 நிமிடங்களே மாறுபடுவது பயணிகள் மத்தியில் நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும்.

இந்தியாவின் 10 அதிவேக ரயில்கள்!


Click it and Unblock the Notifications








