2 மணிநேர படத்தை போட்டு உட்கார்ந்தால் 600கிமீ கடந்து இருப்போம்! இந்தியாவுக்காக ஜப்பான் உருவாக்கி தரும் இரயில்!
புல்லட் இரயில்கள் (Bullet Trains) பல நாடுகளின் பொது போக்குவரத்தை தலைக்கீழாய் திருப்பி போட்டுள்ளன. விமான போக்குவரத்துதான் தொலைத்தூர பயணங்களுக்கு ஒரே தீர்வு என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் புல்லட் இரயில் என்கிற அதிவிரைவான இரயில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தன. அதற்காக பல ஆயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்தன. இந்தியாவை பொறுத்தவரையில், புல்லட் இரயில்கள் இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்தியா வெப்பமான நாடு என்பதால், அதிவேகமாக இயங்கக்கூடிய இரயில்களால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனை கூட தொழிற்நுட்பங்கள் மூலமாக சரிசெய்து விடலாம் என்றாலும், புல்லட் இரயில் போக்குவரத்தை கொண்டுவர பல டிரில்லியன் கணக்கிலான பணத்தை செலவு செய்ய நமது இந்திய அரசு தயக்க காட்டியதுதான் இன்னமும் புல்லட் இரயில் போக்குவரத்து நம் நாட்டில் இல்லாததற்கு காரணம் ஆகும்.

ஆனால், இந்த நிலைமை இன்னும் சில வருடங்களுக்கு மட்டுமே ஆகும். ஏனெனில் புல்லட் இரயில் திட்டத்திற்கு சில வருடங்களுக்கு முன்னரே மத்திய அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்துவிட்டது. இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை குஜராத்தின் அகமதாபாத்திற்கும், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே கொண்டுவரப்பட உள்ளதாகவும், இதற்கான இடம் பார்க்கும் வேலைகள் கூட துவங்கிவிட்டதாகவும் ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம்.
இந்த நிலையில், இந்தியாவிற்கான முதல் புல்லட் இரயில் சோதனை தற்போது நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அல்ல... ஜப்பானில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான புல்லட் இரயில்களை உற்பத்தி செய்து கொடுக்கும் டெண்டரை ஜப்பான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதால், இந்தியாவிற்கான முதற்கட்ட புல்லட் இரயில்கள் ஜப்பான் நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

முதலாவதாக, இரு புல்லட் இரயில்களை இந்தியாவிற்காக உற்பத்தி செய்து ஜப்பான் வழங்க உள்ளது. 'ஷின்கான்சென்' (Shinkansen) என அழைக்கப்படும் இந்த புல்லட் இரயில்களில் இ3 சீரிஸ் எல்67 என்கிற புல்லட் இரயிலின் சோதனை ஓட்டம் ஜப்பான் அரசாங்கத்தின் நேரடி பார்வையின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் வெப்ப காலநிலைக்கு ஏற்றவாறு இந்த புல்லட் இரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் செண்டாய் நகரத்தில் பயன்பாட்டில் இருக்கும் புல்லட் இரயில் வழித்தடத்தின் மெயின் லைனில் வெள்ளை நிறத்திலான இந்த புல்லட் இரயிலின் சோதனை ஓட்டம் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் உடன் நடத்தப்பட்டு உள்ளது.
சோதனை ஓட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற பின், இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட புல்லட் இரயில்கள் ஜப்பானின் நிகாடா என்கிற நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. அங்கிருந்து, நிகாடா துறைமுகம் வழியாக கப்பலில் ஷின்கான்சென் புல்லட் இரயில்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளன. இவ்வாறு ஜப்பானில் இருந்து முதல் புல்லட் இரயில் அடுத்த 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு புல்லட் இரயில்கள் இந்தியாவிற்காக ஜப்பானில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறினோம் அல்லவா... அதில் ஒன்று இ3, மற்றொன்று இ5 ஆகும். இவை இரண்டும்தான் 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டு, குஜராத்தின் சூரத் மற்றும் பிலிமோரா பகுதிகளுக்கு இடையே சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட உள்ளன. மும்பை- அகமதாபாத் இடையே சுமார் 508கிமீ தொலைவிற்கு புல்லட் இரயில் சேவை கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டிற்கே புல்லட் இரயில் சேவை அவசியமாகிறது. ஏனெனில், நம் நாட்டில் எல்லாராலும் விமான சேவையை பயன்படுத்த முடிவதில்லை. இருப்பினும், இந்தியாவில் முதற்கட்டமாக மும்பை மற்றும் குஜராத் இடையே கொண்டுவரப்படும் இந்த அதிவிரைவு இரயில் சேவையை நம் சென்னைக்கு கொண்டுவர இன்னும் 10 வருடங்கள் வரையில் கூட ஆகலாம்.


Click it and Unblock the Notifications








