வேற லெவலுக்கு செல்லும் இந்தியா... விரைவில் அறிமுகமாகிறது அதிநவீன ஹைட்ரஜன் ரயில்
மாசற்ற எரிபொருள் தொழில்நுட்பத்தில் அடுத்த நிலைக்கு செல்லும் விதமாக, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை (Hydrogen Train) இந்தியா அறிமுகம் செய்ய இருக்கிறது. இது புதிய ரயில் நம் நாட்டு ரயில் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாசற்ற எரிபொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்தை நோக்கி உலகின் பெரும்பாலான நாடுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வரும் நிலையில், அதனைவிடவும் செம்மையான போக்குவரத்து தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளும் தீவிரமடைந்துள்ளன. இதில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகன தயாரிப்புக்கான தொழில்நுட்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்களின் தயாரிப்பையும், விற்பனையும் ஊக்கப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதேநேரத்தில், ஹைட்ரஜன் எரிபொருளை சேமிப்பதிலும், கையாள்வதிலும் உள்ள சிக்கல்களை களைந்து அதனை அன்றாட பயன்பாட்டில் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த சூழலில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை விரைவில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வேத் துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்த திட்டத்திற்கு 'ஹைட்ரஜன் ஃபார் ரயில்வேஸ்' என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. 2030ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே கட்டமைப்பை நூறு சதவீதம் மாசற்ற நிலைக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் நூறு சதவீதம் மாசற்றதாக இருக்கும் என்பதுடன், மிகவும் சப்தம் குறைவான தன்மையையும் பெற்றிருக்கும். இதனால், இந்திய ரயில் போக்குவரத்துத் துறையில் இது நிச்சயம் புதிய அத்யாயத்தை எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயிலில் பொருத்தப்படும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் எஞ்சின் 1,200 குதிரைசக்தி திறன் படைத்ததாக இருக்கும். உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில்கள் 600 முதல் 800 குதிரைசக்தி கொண்டதாக இருக்கும் நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும்.
குஜராத்தில் உள்ள தாஹோத் ரயில்வே ஆலையில், 9,000 குதிரை சக்தி திறன் படைத்த ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் எஞ்சினையும் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன", என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது பாரம்பரிய ரயில் எஞ்சின் தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட ரயில் எஞ்சினாக இருக்கும்.
வெளிநாடுகளில் ஏற்கனவே ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் சோதனை முயற்சியில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உலகின் மிக நீளமான ரயில்பாதை கட்டமைப்பை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து ரயில்வே துறை மட்டுமின்றி, பிற துறைகளிலும் ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான பல தொழில்நுட்பங்களை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய ஹைட்ரஜன் ரயில்கள் இந்திய ரயில் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, உலக அளவில் இந்திய ஹைட்ரஜன் ரயில்களின் விற்பனை சந்தைக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானா மாநிலம் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே சோதனை முறையில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








